அல்ஜுனிட்டில் பாதசாரிகள் கடக்குமிடத்தில் 37 வயது ஆடவர் ஒருவர் மீது கார் ஒன்று மோதியதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அல்ஜுனிட் ரோடு, சிம்ஸ் டிரைவ் சந்திப்பில் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) மாலை 5.15 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்த ஆடவர் சுயநினைவுடன் இருந்தார்.
இந்நிலையில், எஸ்ஜி ரோடு விஜிலாண்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், சாலைச் சந்திப்பில் ஆடவர் ஒருவர் நிற்பதைக் காண முடிகிறது.
போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்தில் இருந்தபோது ஒரு அடி முன்னால் செல்லும் அவர், சற்று நேரம் நிறுத்தி, பின்னர் சாலையைக் கடக்கிறார்.
அவ்வழியாகச் சென்ற சிவப்பு நிற கார் ஒன்று அந்த ஆடவர் மீது மோதியதில் சாலையில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.