சிங்கப்பூரரான 26 வயது லெஃப்டினென்ட் நிக்கலஸ் டேங் (எல்டிஏ டேங்), இங்கிலாந்தின் சேண்ட்ஹர்ஸ்ட் அரச ராணுவக் கல்விக் கழகத்தின் ‘ஆகச் சிறந்த அனைத்துலக வீரருக்கான அனைத்துலக வாள்’ விருதைப் பெற்றுள்ளார்.
ஏப்ரல் 12ஆம் தேதி அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பெற்றதன் மூலம் நான்கு மாதங்களுக்குமுன் காலமான தன் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகக் கூறுகிறார் எல்டிஏ டேங். வாளில் அவர் தந்தையின் பெயர் பொறித்துத் தரப்பட்டுள்ளது.
சேண்ட்ஹர்ஸ்ட், உலகின் மிகப் பெருமை வாய்ந்த ராணுவக் கல்விக் கழகங்களில் ஒன்றாகும். பிரிட்டனின் இளவரசர்கள் வில்லியம், ஹேரி, புருணை சுல்தான், வின்ஸ்டன் சர்ச்சில் போன்றோர் அதில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ வீரர்களுக்கு உடற்பயிற்சியுடன் போர் குறித்த கல்வியும் அங்கு வழங்கப்படும்.
2023ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி தொடங்கிய பயிற்சி வகுப்பில் எல்டிஏ டேங்கையும் சேர்த்து 19 நாடுகளின் 26 ராணுவ வீரர்கள் பங்கெடுத்தனர். அவர்கள் அமெரிக்கா, தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
கடந்த டிசம்பரில் அணிவகுப்புக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தபோது எல்டிஏ டேங்கின் தந்தை சிங்கப்பூரில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. மருத்துவர்களின் அறிவுரைக்கேற்ப அவர் உடனடியாகச் சிங்கப்பூர் வந்து தந்தையைப் பார்த்தார்.
58 வயதான மூத்த டேங், மகன் வந்த மூன்றாம் நாள் காலமானார்.
டாக்சி ஓட்டுநரான தந்தை குடும்பத்திற்காகச் செய்த தியாகங்களைக் குறிப்பிட்ட எல்டிஏ டேங், சிறுவனாக இருந்தபோது பள்ளி முடிந்து தான் வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே தந்தை இரவில் டாக்சி ஓட்டச் சென்றுவிடுவார் என்பதால் அதிக நேரம் அப்பாவுடன் நேரம் செலவழித்ததில்லை என்று நினைவுகூர்ந்தார்.
தந்தையின் மறைவு சோகத்தில் ஆழ்த்தினாலும் பயிற்சியில் தான் சிறப்பாகச் செய்யவேண்டுமென்ற உந்துதலையும் அதுவே தந்ததாகக் கூறினார் எல்டிஏ டேங்.
1.65மீட்டர் உயரமும் 64 கிலோ எடையுமுள்ள அவர், அந்தப் பயிற்சிக் குழுவில் இடம்பெற்ற ஆண்களில் உயரம் குறைந்தவராகவும் ஒல்லியாகவும் இருந்ததால் அனைவரும் அவரைச் செல்லமாக பொம்மை வீரர் எனப் பொருள்படும்படி ‘டாய் சோல்ஜர்’ என்று அழைப்பர்.
கடுமையான போட்டிக்கிடையே மிகச் சிறந்த அனைத்துலக வீரர் என்ற தகுதியைப் பெற்றது, தாய்நாட்டையும் குடும்பத்தையும் சிறப்பாகப் பிரதிநிதித்த பெருமையையும் அனைத்துக்கும் மேலாக தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய தருணமாகவும் அமைந்தது என்கிறார் எல்டிஏ டேங்.