மண்வெட்டியால் குழி தோண்டி மரம், நடுவதற்கு தேசிய பூங்காக் கழக ஊழியர்களிடம் இளம் தொண்டூழியர்கள் கற்றுக்கொண்டனர்.
இவர்கள் ‘மைண்ட்ஸ்’ தொண்டர்களுடன் சேர்ந்து 70க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பாசிர் ரிஸ் வட்டாரத்திற்கு மேலும் பசுமை சேர்த்தனர்.
சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் இளையர் மன்றத்தையும் அறிவுத்திறன் குறைபாடுள்ளோருக்கான ‘மைண்ட்ஸ்’ அமைப்பையும் சேர்ந்த கிட்டத்தட்ட 20 தொண்டூழியர்கள், பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் மார்ச் 13ஆம் தேதி, காலை 9.30 மணிக்குக் கூடினர்.
நிகழ்ச்சியில் தேசிய பூங்காக் கழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மரம் நடுவது பற்றி பங்கேற்பாளர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். பின்னர் அவர்கள் மரம் நட்டனர்.
அறிவுத்திறன் குறைபாடு உள்ளோரைச் சமூக நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கும் விதமாக இந்நடவடிக்கை இடம்பெற்றது.
மரம் நடுவதால் சிங்கப்பூர் மேலும் தூய்மையாகவும் பசுமையாகவும் திகழ்வதாக சிண்டாவின் இளையர் பிரிவைச் சேர்ந்த 20 வயது பாலவிக்னேஷ் கருதுகிறார்.
“பூமி வெப்பமயமாதலின் தாக்கத்தை எதிர்த்து, இந்தப் பூமியையும் அதில் வாழும் மக்களைப் பாதுகாக்கவும் மரங்கள் நட்டு உதவுவதற்காக இந்நிகழ்வில் கலந்துகொண்டேன்,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் மரங்களை நடும் தேசிய பூங்காக் கழகத்தின் இலக்கை அடைவதில் தங்கள் முயற்சி துணைநிற்பதாக தொண்டூழியரும் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவியுமான ஹர்ஷினி, 19, கூறினார். “இதனால் சுற்றியுள்ளோருக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது,” என்றார் அவர்.
முதன்முறையாக மரம் நடும் நிகழ்வில் பங்கேற்ற 19 வயது வினரீட்டா, அறிவுத்திறன் குன்றியோருடன் இத்தகைய நடவடிக்கைகளில் பங்கேற்பது புதிய அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
மகள் கீர்த்தனாவுடன் பொது இடத்தில் முதன்முறையாக மரம் நட்ட எழினி கருணாகரன், “நாம் நட்ட மரம் வளர்ந்து நிற்பதைக் காணும்போது ஏற்படும் மகிழ்ச்சி விவரிக்க முடியாதது என்று மகளிடம் கூறினேன்,” என்றார் அவர்.