முன்னாள் சிறைத் துறை மூத்த அதிகாரி, கைதி ஒருவருக்கு தம்மால் உதவ முடியும் என்று கூறி அவரிடம் மொத்தம் $133,000 லஞ்சமாகப் பெற முயன்றார்.
தற்பொழுது ஓய்வு பெற்றுவிட்ட கோபி கிருஷ்ணா அய்யாவு என்ற அந்த முன்னாள் சிறைத் துறை அதிகாரிக்கு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) அன்று மூன்று ஆண்டுகள் இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோபி கிருஷ்ணா அய்யாவுக்கு எதிரான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட எட்டு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று மாவட்ட நீதிபதி ஜான் இங் தீர்ப்பளித்தார்.
மேலும் கோபி கிருஷ்ணா அய்யாவு முறைகேடான கணினிப் பயன்பாடு மற்றும் இணையப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றம் புரிந்ததாக தீர்ப்பளித்தார் மாவட்ட நீதிபதி ஜான் இங். அந்த சமயம் கோபி கிருஷ்ணா அய்யாவு தமது இரு சகாக்களை தூண்டிவிட்டு சிறைத் துறை நடவடிக்கைகள் தொடர்பான கணினி கட்டமைப்பில் ஊடுருவ வைத்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோபி கிருஷ்ணா அய்யாவு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவர் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வுபெற்றார்.
கோபி கிருஷ்ணா அய்யாவுக்கு எதிரான ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில், அவர் சோங் கெங் சாய் என்பவரிடம் பணம் பெற முயன்றார். சோங் மிக மோசமான சிறார் துன்புறுத்தல் குற்றத்துக்காக சிறையில் இருந்தார்.
சோங் தமது காதலியின் ஏழு வயது பிள்ளையை ஏழு மாதங்களுக்கும் மேலாக தாக்கி பின்னர் அந்தப் பிள்ளை இறக்கக் காரணமாக இருந்தார். அந்தச் சிறுவனின் இரு சகோதரிகளையும் துன்புறுத்தினார்.
சோங்க்கு 2005ஆம் ஆண்டு 20 ஆண்டு தடுப்புக் காவல் தண்டனையுடன் ஒன்பது பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.