இம்மாதம் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான விமானக் காட்சியில் ஏர்பஸ் 350-1000 ரக விமானம் நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட எரிபொருளில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எரிபொருளை ஷெல் ஏவியேஷன் நிறுவனம் வழங்குகிறது. அந்த எரிபொருளில் 35 விழுக்காடு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், விலங்குக் கொழுப்புச் சத்துடன் செய்யப்பட்ட மூலப்பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டது.
விமானக் காட்சியில் இடம்பெறவுள்ள ஏர்பஸ் 350-1000 விமானத்திற்கு ஞாயிற்றுக்கிழமையன்று (18 பிப்ரவரி) 12.8 டன் அளவிலான 35 விழுக்காடு நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட எரிபொருள் நிரப்பப்பட்டது. சாங்கி விமான நிலையத்தில் செய்தியாளர்களின் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட எரிபொருள் சுற்றுச்சூழலுக்குக் கூடுதல் உகந்தது எனக் கருதப்படுகிறது. அதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தை சராசரியாக 80 விழுக்காடு குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது எல்லா விமானங்களும் 50 விழுக்காடு வரை நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட எரிபொருளில் இயங்கக்கூடியவை என்று ஏர்பஸ் ஞாயிற்றுக்கிழமையன்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
இவ்வாண்டுக்கான விமானக் காட்சி செவ்வாய்க்கிழமை (20 பிப்ரவரி) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (25 பிப்ரவரி) வரை நடைபெறும்.