உலக வெப்பநிலை பெரிய அளவில் அதிகரிப்பதன் காரணமாக பல நாடுகள் மறுபயனீட்டு எரிசக்திக்கு மாறி வருகின்றன.
அதேவேளை, மோசமடைந்துவரும் பருவநிலையிலிருந்து பசுமை எரிசக்தி எவ்வளவு பாதுகாப்பு வழங்கும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. உதாரணமாக, வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகரித்தால் சூரியசக்தித் தகடுகள் சரியாகச் செயல்படாமல் போகலாம்.
அப்படியிருக்கையில் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு மின்சார விநியோகத்துக்கும் அதற்கான தேவைக்கும் எத்தகைய பாதிப்பு வரக்கூடும் என்பதை ஆராயும் முயற்சியில் உள்ளூர் ஆய்வுக் குழு ஒன்று ஈடுபட்டுள்ளது. நிலைமைக்கு ஏற்றவாறு எரிசக்தி முறையை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதை அறிய இம்முயற்சி எடுக்கப்படுகிறது.
வி3 என்றழைக்கப்படும் மூன்றாவது தேசிய பருவநிலை மாற்ற ஆய்வின் தரவுத் தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் எரிசக்தி பொறியியல் நிலையத்தின் இணைப் பேராசிரியர் சு யானின் தலைமையிலான குழு ஆய்வை நடத்துகிறது.
அதிகரிக்கும் வெப்பநிலை, மோசமான வானிலை ஆகியவை இந்த வட்டாரத்தில் சூரியசக்தித் தகடுகள், காற்று போன்றவற்றைக் கொண்டு எரிசக்தி உற்பத்தி செய்யும் முறைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஆராய்வது ஆய்வின் இலக்காகும். குறிப்பாக மலேசியா, இந்தோனீசியா, வியட்னாம் ஆகிய நாடுகளை மையமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்படும்.
வி3 ஆய்வின் முடிவுகள் இவ்வாண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியன்று வெளியிடப்பட்டன. பருவநிலை மாற்றத்தை ஆராயும் அரசாங்கங்களுக்கிடையிலான ஐக்கிய நாட்டு சபைக் குழுவின் அறிக்கையில் இடம்பெறும் தகவல்களைக் கொண்டு வி3 ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அறிக்கையில் இடம்பெறும் உலகளாவிய பருவநிலை தகவல்களைக் கொண்டு வி3 உள்ளுர் நிலவரத்தை விவரிக்கும்.
பசுமை எரிசக்தியைக் கூடுதலாகப் பயன்படுத்தும் முயற்சிகளை சிங்கப்பூர் எடுத்து வருகிறது.
2035ஆம் ஆண்டுக்குள் சுமார் 30 விழுக்காட்டு எரிசக்தியை கம்போடியா, இந்தோனீசியா, வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்து வாங்க சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு வாங்கப்படும் எரிசக்தி, மறுபயனீட்டு எரிசக்தியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.