இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து மின்வர்த்தக மோசடியில் சிக்கிய குறைந்தது 583 பேர் 223,000 வெள்ளி வரை இழந்துள்ளனர்.
பிப்ரவரி 8ஆம் தேதி ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை இதனை தெரிவித்தது.
இவர்களில் பெரும்பாலோர் மேடை நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்கி ஏமாந்தவர்கள்.
மோசடிகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 18 முதல் 27 வயதுக்குட்பட்ட ஓர் ஆணும் மூன்று பெண்களும் வர்த்தகப் விவகாரப் பிரிவு, காவல்துறை நிலையங்கள், கேரசல், அரசாங்க தொழில்நுட்ப முகவை ஆகியவை கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்டனர்.
ஜனவரி 31ஆம் தொடங்கிய சோதனை நடவடிக்கை பிப்ரவரி 6 வரை நீடித்தது.
நால்வரும் ‘டைலர் ஸ்விஃப்ட்’, ‘கோல்ட்பிளே’, ‘யோசோபி’, ‘ஜோக்கர் ஸுயூ’ போன்றவற்றுக்கான நுழைவுச் சீட்டுகளை விற்பதாகக் கூறி ஏமாற்றியிருப்பதாக நம்பப்படுகிறது.
இதற்காக புதிய வங்கிக் கணக்குகளை அவர்கள் திறந்தனர். அதுமட்டுமல்லாமல் புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்கவும் கைபேசி சந்தா பெறவும் சிங்பாஸ் தகவல்களை அவர்கள் தவறாகப் பயன்படுத்தியிருப்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை அறிக்கை தெரிவித்தது.