சிங்கப்பூர் புத்தக மன்றம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2024க்கான படைப்புகளை பிப்ரவரி 15ஆம் தேதி வரை அனுப்பி வைக்கலாம்.
இவ்வாண்டு காமிக்ஸ்/ கிராஃபிக் நாவல் எனப்படும் படங்களுடன் கூடிய புனைகதை, சிறந்த மொழிபெயர்ப்புப் படைப்பு, சிறந்த முதல் நூல் ஆகிய மூன்று புதிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.
2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் வெளியிடப்பட்ட நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மொழிபெயர்ப்புக்கு இந்த விதி பொருந்தாது.
புனைவு, அபுனைவு, கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் ஆகிய மொழிகளில் தேர்வு பெறும் சிறந்த படைப்புகளுக்கு S$3,000 ரொக்கப் பரிசுடன் பரிசுக் கிண்ணமும் அளிக்கப்படும்.
கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பன்மொழிப் போட்டியில் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளும் பங்கேற்கலாம்.
இதுவரை 150க்கும் மேற்பட்ட படைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இவ்விருதுகள் சிங்கப்பூரில் ஆக்கபூர்வமான எழுத்துக்கான ஆர்வத்தையும் ஆதரவையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரர்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதன் மூலம் சிங்கப்பூர் இலக்கியத் திறமையை மேம்படுத்தும் நோக்கிலும் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
மேல் விவரங்களுக்கு காண்க: https://www.bookcouncil.sg/awards/slp-2024