வரும் ஜூலை மாதம் பிற்பகுதியில் தனது வளாகத்தில் வருகையாளர் நிலையம் அமைக்கப்படும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) பிப்ரவரி 9ஆம் தேதி தெரிவித்தது. அந்நிலையம் மூலம் வருகையாளர்களுக்கு ‘அர்த்தமுள்ள, மனதை ஈர்க்கக்கூடிய அனுபவத்தை’ கொடுக்கும் என்று அது கூறியது.
இந்தத் திட்டத்தின் மூலம் பல்கலைக்கழகத்துக்கு வருகை புரிவோருக்கு, பயிற்சி பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் வழிகாட்டிச் சுற்றுலாக்களை நடத்துவதோடு, பல்கலைக்கழக வளாகத்தில் வருகையாளர் வரத்தையும் நிர்வகித்து நடத்துவார்கள்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்திலும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலும் (என்டியு) வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அந்த வளாகங்களில் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் சுற்றுப்பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது குப்பையை விட்டுச் செல்கிறார்கள் என்றும் மாணவர்களின் கழிப்பறைகளை அவர்கள் பயன்படுத்துவதால், மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. வளாகத்துக்குச் சென்று திரும்பும் பேருந்துகளிலும் உணவிடங்களிலும் அவர்கள் அதிகம் தென்படுவதால், மாணவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுகிறது என்றும் இரு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் புகார் அளித்தனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இதன் காரணமாகத்தான் புதிய வருகையாளர் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
சுற்றுலா நடத்துநர்கள் தங்கள் வளாகத்தில் சுற்றுப்பயணிகளை அழைத்து வரவிரும்பினால், நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும், சுற்றுலாக்களுக்கு முன்கூட்டியே பதிந்துகொள்ளுதல் போன்ற புதிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும் அனுமதிக்கப்பட்ட பயணிகள் குழுவுக்கான குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குதல் போன்றவையும் புதிய நடைமுறைகளில் அடங்கும் என்று பிப்ரவரி 1ஆம் தேதி என்டியு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஒப்புநோக்க, என்யுஎஸ் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிட்ட ஊடக அறிக்கையில், தனது இடம் திறந்த வளாகமாக இருப்பதால் வருகையாளர்களுக்குக் கட்டணம் விதிக்கப்பட மாட்டாது என்று கூறியது. “உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வருகையாளர்களை வரவேற்பதால் நாங்கள் பெருமையடைகிறோம். எங்கள் கல்லிக் கழகத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அது அவர்களுக்கு ஓர் அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்,” என்று மேலும் தெரிவித்தது.
“வருகையாளர்கள் மேற்கொள்ளும் சுற்றுலாவால், என்யுஎஸ்-சில் கல்வி கற்கும், தங்கும் மாணவர்களுக்கும் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் எந்த வகையிலும் தொந்தரவோ இடையூரோ வராமல் பார்த்துக்கொள்ளப்படும்,” என்றும் அது கூறியது.
2024 ஜூலையில் தொடங்கும் கோடைக்கால விடுமுறை காலத்தில் புதிய வருகையாளர் நிலையம் செயல்படத் தொடங்கும்.