நேரடி பள்ளி சேர்க்கைப் பயிற்சியின் (டிஎஸ்ஏ) முடிவுகள் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டிலும் பெற்றோரிடமிருந்து ஏழு புகார்கள் கிடைத்ததாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் பிப்ரவரி 7ஆம் தேதியன்று தெரிவித்தார்.
ஆனால் தங்களுக்குத் தகுந்த மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளைப் பள்ளிகள் நியாயமான வகையிலும் நிபுணத்துவ முறையிலும் நடத்துவதாக அவர் உறுதி அளித்தார்.
டிஎஸ்ஏ பயிற்சிக்கான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் நடந்துகொள்வதைக் கல்வி அமைச்சு எவ்வாறு உறுதி செய்கிறது என்றும் பள்ளிகள் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதைத் தடுக்க என்னென்ன நடைமுறைகள் உள்ளன என்பது குறித்தும் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சான் பதிலளித்தார்.
விளையாட்டு, கலைகள் போன்ற துறைகளில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களை அடையாளம் கண்டு, தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டு தேர்வை அவர்கள் எழுதுவதற்கு முன்பாகவே அவர்கள் விரும்பும் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்துப் பயில மாணவர்களுக்கு இடம் வழங்க டிஎஸ்ஏ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
டிஎஸ்ஏ மூலம் மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கும் பயிற்சியில் பாரபட்சமான போக்கு குறித்து புகார் அளிக்கப்பட்டால் அமைச்சு விசாரணை நடத்தும் என்று அமைச்சர் சான் கூறினார்.
டிஎஸ்ஏ திட்டம் மூலம் கடந்த ஆண்டு 4,400 மாணவர்கள் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.