முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மீதான வழக்கில் விசாரணைக் குழு அமைப்பதன் தேவை குறித்து முடிவெடுப்பதற்கு முன்னால் நாடாளுமன்றம், நீதிமன்றத்தின் முடிவுக்குக் காத்திருக்கும்.
பிப்ரவரி 5ஆம் தேதி, இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங்கின் கேள்விக்குப் பதிலளிக்கையில் நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா, நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.
ஊழலற்ற நடைமுறை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உறுதிசெய்ய, திரு ஈஸ்வரன் விவகாரத்தில் விசாரணைக் குழு அமைக்க வேண்டியது அவசியமா என்று திரு யிப் கேட்டிருந்தார்.
ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவு 2023 ஜூலையில் திரு ஈஸ்வரனைக் கைது செய்தது. பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் விசாரணை நிறைவடையும்வரை விடுப்பில் செல்லுமாறு திரு ஈஸ்வரனுக்கு, பிரதமர் லீ சியன் லூங் அறிவுறுத்தியிருந்தார்.
ஜனவரி 18ஆம் தேதி, திரு ஈஸ்வரன் மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மொத்தம் $380,000 ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவை.
மார்ச் 1ஆம் தேதி திரு ஈஸ்வரன் மீதான வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் இடம்பெறும்.
மரணம் விளைவித்தது உள்ளிட்ட விபத்துகள், கடுமையான காயம், சொத்துகளை மோசமாக சேதப்படுத்துதல், பொதுமக்களின் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் அல்லது அமைச்சின் நிர்வாகத்துக்கு பங்கம் ஏற்படுத்திய சம்பவங்கள் போன்றவை குறித்துதான் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் இந்திராணி ராஜா விளக்கினார்.
இதற்கு முன்னால், சிங்ஹெல்த் இணையத் தாக்குதல் தொடர்பில் 2018ஆம் ஆண்டிலும், 2019ல் சிங்கப்பூர் நடிகர் அலோய்ஷியஸ் பாங் தேசிய சேவையின்போது மாண்டது தொடர்பிலும் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
“ஒரு நடவடிக்கை எவ்வாறு நடந்தது என்பதைக் கண்டறிவதே விசாரணைக் குழு அமைப்பதன் நோக்கம்.
“இந்த விவகாரத்தில் ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவு ஏற்கெனவே விசாரித்துள்ளது. அதன் அடிப்படையில், தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் திரு ஈஸ்வரன் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்த அடிப்படை இருப்பதாகக் கருதுகிறது.
“குற்றச்செயல்கள் நடைபெற்றதை உறுதிசெய்வது நீதிமன்றத்தின் பொறுப்பு. தற்போது அது இந்த வழக்கை விசாரித்து வருகிறது,” என்று அமைச்சர் இந்திராணி கூறினார்.