வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் முன்மொழியப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் கெம்பாங்கான் ரயில் நிலையத்திற்கு அருகே 340 தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகள் (பிடிஓ) கட்டப்படவுள்ளன.
மேலும் அங்கு ஓர் ஐந்து மாடி கட்டடம் கட்டப்படவுள்ளது. அதில் ஒரு புதிய சமூக மன்றம், பேரங்காடி, கடைகள் போன்றவை இடம்பெறுகின்றன.
திட்டத்தில் 18 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்களும் உள்ளன. அதில் நீக்குப்போக்கான (பிளெக்சி) இரு அறை வீடுகள், நான்கு அறை வீடுகள் இருப்பதாக வீவக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
வீடுகளுக்கு அருகே பல மாடி கார் நிறுத்துமிடம், மருத்துவ நிலையம் ஆகியவை அமையவிருக்கிறது.
கம்போங் கெம்பங்கான் சமூக மன்றம் இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு பூங்கா ஒன்று கட்டப்படவுள்ளது.
அந்த சமூக மன்றம் லெங்கோங் திகாவில் உள்ளது. ஜூன் 30ஆம் தேதி வரை அது அங்கு செயல்படும். அதன்பின்னர் அந்த மன்றம் தற்காலிகமாக இயுனோஸ் எம்ஆர்டி எதிரில் உள்ள கம்போங் உபி சமூக மன்றத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கெம்பங்கான் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட வசதிகளை அமைத்து தர வளர்ச்சி திட்டம் உதவும் என்று வீவக கூறியது.
திட்டம் குறித்த மேல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் வீவக தெரிவித்தது.