எளிய, சிக்கனமான காப்பீட்டுத் திட்டங்கள் வாங்கப்படுவதை சிங்கப்பூர் நாணய ஆணையம் (எம்ஏஎஸ்) எளிமையாக்க விரும்புகிறது.
தங்களின் தேவைக்கு ஏற்ற காப்பீட்டுத் திட்டங்களை பயனீட்டாளர்கள் வாங்குவதன் மூலம் காப்புறுதிப் பாதுகாப்பில் உள்ள இடைவெளி சுருங்கும்.
சிக்கனமான காப்புறுதித் திட்டங்களை விற்கும் நிதி நிறுவனங்களுக்குப் பயனீட்டாளர்கள் அளிக்க வேண்டிய தனிப்பட்ட தகவல்களின் அளவைக் குறைக்க ஆணையம் உத்தேசித்து உள்ளது.
நீண்டகால ஆயுள் காப்புறுதித் திட்டங்கள், அத்தகைய திட்டங்களுடன் சேர்த்து விற்கப்படும் கடுமையான நோய் தொடர்பான காப்புறுதித் திட்டங்கள், கடுமையான நோய்க்காக மட்டுமே உள்ள காப்புறுதித் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆணையத்தின் இந்த யோசனை பொருந்தும்.
அடிப்படை நிதித் திட்ட வழிகாட்டி முறைகளின்படி காப்புறுதித் திட்டங்களை நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பரிந்துரைக்கும்போது, அத்திட்டங்களை ஏற்க சம்மதிக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து குறைவான தகவல்களை மட்டுமே பெற பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆணையம் உத்தேசித்துள்ள மாற்றம் இது.
தனிப்பட்டோரின் சேமிப்பு, காப்புறுதி மற்றும் முதலீட்டுத் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் அந்த வழிகாட்டித் தொகுப்பில் சில விதிமுறைகள் இடம்பெற்று உள்ளன.
உதாரணத்திற்கு, எல்லாம் கழித்தது போக மிஞ்சும் சம்பளத்தில் 15 விழுக்காட்டை மட்டுமே காப்புறுதிப் பாதுகாப்புக்குச் செலுத்த பயனீட்டாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், தங்களது ஆண்டு வருமானத்தைக் காட்டிலும் ஒன்பது மடங்கு அதிகமாக காப்புறுதிப் பாதுகாப்புத் தொகை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மரணம் அல்லது நிரந்தர உடற்குறைக்கான காப்புறுதித் திட்டத்திற்கு இது பொருந்தும்.
அதேநேரம், கடுமையான நோய் தொடர்பான காப்புறுதித் திட்டங்களுக்கு நான்கு மடங்கு ஆண்டு வருமானம் இருக்கும் வகையில் திட்டங்களைத் தேர்ந்து எடுக்க சிங்கப்பூர் நாணய ஆணையம் ஊக்குவிக்கிறது.
அந்த காப்புறுதித் திட்ட வழிகாட்டித் தொகுப்பை சிங்கப்பூர் நாணய ஆணையமும் மணிசென்ஸ் எனப்படும் தேசிய நிதிக் கல்வித் திட்ட அமைப்பும் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கின.
மத்திய சேம நிதிக் கழகம், நிதித் தொழில் சங்கங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பில் அது தொடங்கப்பட்டது.
வெவ்வேறு வாழ்க்கைக் கட்டத்தில் இருக்கும் தனிப்பட்டோருக்காக ஆறு துணைப் பிரிவுகளுடன் அந்த வழிகாட்டித் தொகுப்பு கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி புதுப்பிக்கப்பட்டது என சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.