பங்கு மூலதனச் சந்தை, பங்குச்சந்தை வர்த்தகத்திற்கான ‘டிபிஎஸ்’விக்கர்ஸ், ‘டிபிஎஸ்’ மின்னிலக்க பரிவர்த்தனை ஆகியவற்றை அதன் தற்போதைய கருவூலச் சந்தை வர்த்தகத்துடன் இணைக்கப் போவதாக ‘டிபிஎஸ்’ வங்கி கூறியுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ‘டிபிஎஸ்’ வங்கி இது குறித்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2ஆம் தேதி) அன்று வெளியிட்டது.
ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் புதிய குழு வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்தக் குழுவிற்கு ‘உலகளாவிய நிதிச் சந்தைகள்’ எனப் பெயரிடப்படும் என்றும் அவ்வறிவிப்பில் ‘டிபிஎஸ்’ குறிப்பிட்டது.
மேலும், தனது வங்கிப் பணியிலிருந்து மூலதனச் சந்தைகளின் குழுமத் தலைவரான திருவாட்டி எங்-குவோக் சீட் மோய் வரும் மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார். 36 ஆண்டு காலமாக அவர் ‘டிபிஎஸ்’ வங்கியில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
அவர் ஓய்வு பெறுவதையடுத்து டிபிஎஸ் வங்கியின் நிர்வாக தலைமைப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும் என்பதால் இந்தப் புதிய அறிவிப்பை ‘டிபிஎஸ்’ வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் புதிய இணைக்கப்பட்ட குழுவைத் தற்போதைய கருவூலச் சந்தைகளின் தலைவர் திரு ஆண்ட்ரூ இங் வழிநடத்துவார் என ‘டிபிஎஸ்’ தெரிவித்தது.