புவிசார் அரசியல் பதற்றங்கள், கடன் வழங்குவதில் உள்ள சவால்களுக்கு மத்தியின் டிபிஎஸ் ஹோல்டிங்ஸ் குழுமம் எதிர்பார்த்ததற்கும் மேலாக தனது காலாண்டு வருமானம் இருந்ததாக திங்கட்கிழமை கூறியது.
இதனால் அடுத்த ஆண்டின் நிகர லாபம் 2023ஆம் ஆண்டு நிகர லாபத்தை ஒத்திருக்கும் என்றும் அது தெரிவித்தது.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய வங்கியாக விளங்கும் டிபிஎஸ் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ஆண்டு அடிப்படையில் 16% அதிகரித்து $2.59 பில்லியனை எட்டியதாக அது விளக்கியது.
தைவான் சிட்டிபேங்க் வங்கியுடனான இணைப்பினால் ஏற்பட்ட ஒருமுறை செலவினமான $40 மில்லியனைத் தவிர்த்துப் பார்த்தால், வருவாய் 18% உயர்ந்து $2.63 பில்லியனை எட்டியது. இது புளூம்பெர்க் கருத்துக் கணிப்பில் நிபுணர்களின் எதிர்பார்த்த $2.54 பில்லியனையும் மிஞ்சிவிட்டதாகக் கூறப்படுகிறது.
தைவான் சிட்டிபேங்க் இணைப்பு ஆகஸ்ட் 12ஆம் இறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு சொத்துப் பட்டியலின்படி டிபிஎஸ் வங்கி அந்நாட்டில் ஆகப் பெரிய வங்கியாக விளங்குகிறது.
மூன்றாம் காலாண்டில் ஒவ்வொரு பங்குக்கும் 48 காசுகளை லாப ஈவாக டிபிஎஸ் குழுமம் அறிவித்துள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டுக்கு ஈடான லாப ஈவு. இதன்மூலம் பங்கு ஒன்றுக்கு கடந்த ஒன்பது மாத லாப ஈவாக அறிவித்துள்ள் தொகை $1.38 என்று கணக்கிடப்படுகிறது.
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் $2.8 பில்லியன் அளவு மோசடியில் கைதான நபர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் மற்ற பெரிய வங்கிகளுடன் டிபிஎஸ் வங்கிக்கும் தொடர்புள்ளது. அந்தப் பணத்தைக் கொண்டு குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நிலச் சொத்துகள், சொகுசு கார்கள் போக ரொக்கமாகவும் வைத்திருந்தனர்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் மோசடியில் டிபிஎஸ் வங்கியின் $100 மில்லியனுக்கு தொடர்பிருப்பதாக அந்த வங்கியின் தலைமை நிர்வாகி பியூஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இவை பெரும்பாலும் நிலச் சொத்துகள் வாங்குவதற்காகவும் அவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் வைத்திருந்த பணமாகவும் இருந்ததாக திரு பியூஷ் குப்தா கூறினார்.