கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் 1939இல் தக்கலை சங்கத்தை சிங்கப்பூரில் நிறுவி சமூக சேவையாற்றி வருகிறார்கள்.
சிங்கப்பூரின் புகழ்பெற்ற ரோஜாக் உணவின் தயாரிப்பு முன்னோடிகளான தக்கலை மக்கள், இன்றுவரை அதன் சுவையை தனித்தன்மையோடு கையாள்வதோடு சிங்கப்பூர் சமூகத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பங்காற்றி வருகிறார்கள்.
தக்கலை என்றாலே ஞானமேதை பீர் முஹம்மது அப்பா என்கிற இறைநேசரின் பெயர் நினைவுக்கு வரும். தென்காசியில் பிறந்த சூஃபி ஞான மேதையான அவருடைய மரபுக்கவிதைகளால் ஆன ‘ஞானப்புகழ்ச்சி’ மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பல பல்கலைக் கழகங்கள் ஞானப்புகழ்ச்சியை தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் ரஜப் மாதத்தில் தக்கலை தர்காவில் ஞானப்புகழ்ச்சி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறும். தமிழ்நாடு மட்டுமன்றி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் இலங்கை, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் அதில் கலந்துகொள்வர்.
அதை முன்னிட்டு, இவ்வாண்டு ஜனவரி 25 ந்தேதி டன்லப் தெரு அப்துல் கபூர் பள்ளிவாசல் பன்னோக்கு அரங்கில் ஞானப்புகழ்ச்சி நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் தக்கலை முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
கிட்டத்தட்ட 70 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், முனைவர் எச். எம். சலீம், ஞானப்புகழ்ச்சி பற்றி எடுத்துரைத்தார். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் இணை அமைப்பினர் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
செய்தி: தக்கலை முஸ்லிம் சங்கம்