பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது உடல் உழைப்புத் தொழிலார்களாக சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த தமிழகத்தின் மாரியூரைச் சேர்ந்தோர் ‘மாரியூர் அசோசியேஷன் சிங்கப்பூர்’ எனும் சங்கத்தை அண்மையில் தொடங்கி உள்ளனர்.
சென்னையிலிருந்து ஏறத்தாழ 570 கிலோமீட்டர் தொலைவில் கடலோரம் அமைந்துள்ளது மாரியூர். அங்கிருந்து வந்தோர் தொடக்கத்தில் கொள்கலன் கையாளும் தொழிலாளர்களாக இருந்தனர்.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின்னர் அவர்களில் பெரும்பாலோர் ரொட்டி பரோட்டா, மீ கோரிங் தயாரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் 1980களுக்குப் பிறகு தங்கள் குடும்பங்களை இங்கு வரவழைத்தனர்.
சிங்கப்பூரில் பயின்ற இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் தொண்டூழியத்தில் ஈடுபடும் நோக்கில் இச்சங்கம் உருவானதாக சங்க நிர்வாகம் தெரிவித்தது.
இம்மாதம் 10ஆம் தேதி உள்துறை, தேசிய வளர்ச்சி துணையமைச்சர் முகமது ஃபைஷல் இப்ராஹிம் மாரியூர் சங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
மாரியூரிலிருந்து குடியேறியோர் சிங்கப்பூர் அங்காடித் தொழிலில் முத்திரை பதித்து உணவுப் பண்பாட்டின் மூலம் சமூகத்தை இணைப்பதாக அவர் தமது உரையில் கூறினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், மாரியூர்க்காரர்கள் உழைப்பால் இன்று சமூகத்தில் உயர்ந்து நிற்பதாகக் கூறினார்.
மாரியூரைச் சேர்ந்தவர்களை சிங்கப்பூர் சமூகத்துடன் ஒன்றிணைக்கவும் வசதி குறைந்த மாணவர்களுக்குக் கல்வி உதவி அளிக்கவும் சிங்கப்பூர் முஸ்லிம் பேரவையுடன் இணைந்து செயல்பட உள்ளதாகத் தெரிவித்தார் சங்கத் தலைவர் ஜின்னா.
நிகழ்ச்சியில் பங்குகொண்ட எழுத்தாளர் காசிம் ஷா நவாஸ், 60, இதுவரை குடும்ப விழாக்களில் ஒன்றுகூடிய மாரியூர் மக்கள் இனி சமுதாய மேம்பாட்டிற்காக இணைந்து பாடுபட இருப்பதை வரவேற்பதாகக் கூறினார்.
காலனி ஆதிக்க காலத்தில் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த மக்களின் வரலாற்றை மாரியூர் இளையர்கள் எழுத முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கல்சா சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏறக்குறைய 350 பேர் கலந்துகொண்டனர்.
தகவல், படம்: மாரியூர் சங்கம்