போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று சிங்கப்பூரர்கள் ஜனவரி 29ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கடத்தியதாகக் கூறப்படும் போதைப்பொருளின் மொத்த மதிப்பு ஏறத்தாழ $470,000.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் 2,602 கிராம் கஞ்சாவும் 842 கிராம் ‘ஐஸ்’ வகை போதைப்பொருளும் அடங்கும்.
இவை 850 போதைப் பித்தர்களுக்கு ஒருவாரத்துக்குத் தேவையான போதைப்பொருள் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஜனவரி 31ஆம் தேதியன்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். இரண்டு வெவ்வேறு இடங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜனவரி 29ஆம் தேதி பிற்பகல், ஹேவ்லாக் சாலையில் இருந்த காரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் $118,000 பெறுமானமுள்ள பல்வகை போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் காரை ஓட்டிய 35 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அதே நாளன்று பிடோக் ரெசர்வோர் சாலையில் உள்ள வீட்டில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த 35 வயது ஆடவரையும் 23 வயது பெண்ணையும் அவர்கள் கைது செய்தனர்.
அந்த வீட்டிலிருந்து ஏறத்தாழ $352,000 பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
250 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ வகை போதைப்பொருள் அல்லது 500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவைக் கடத்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.