ஹவ்காங்கில் வசிக்கும் 41 வயது திருவாட்டி குவெக், ஜனவரி 6ஆம் தேதி தன் காரின் இயந்திரப் பகுதியில் எலியின் எச்சங்களைக் கண்டு திடுக்கிட்டார். அவரால் காரை இயக்க முடியவில்லை.
அதேநாள் பிற்பகலில் கார் இயந்திரத்திற்கான மின்னிணைப்புக் கம்பியின் ஒரு பகுதி முற்றிலுமாகக் கடித்துத் துப்பப்பட்டிருந்ததை அவர் கண்டறிந்தார்.
எனவே, அவரது காரை மற்றொரு வாகனத்தின் உதவியுடன் பழுதுபார்க்குமிடத்துக்கு இழுத்துச் செல்ல நேரிட்டது.
ஜனவரி 29ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு நேர்காணல் அளித்த திருவாட்டி குவெக், 2021ஆம் ஆண்டு முதல், ஹவ்காங் அவென்யூ 8ல் தான் வசிப்பதாகவும் இதற்கு முன்னரும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்ததாக பாதிக்கப்பட்ட சில குடியிருப்பாளர்கள் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாகவே அந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான எலிகள் காணப்படுவதாக நீண்டகாலமாக அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் சொன்னதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்தக் குடியிருப்புப் பேட்டை 35 ஆண்டு பழமையானது என்பதால் இது வழக்கம்தான் என்று இங்கு குடிவந்த புதிதில் நினைத்தேன்,” என்றார் திருவாட்டி குவெக்.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் இரவு நேரத்தில் சாக்கடைகள், கார் நிறுத்துமிடங்கள் போன்றவற்றில் எலிகள் ஓடியதைக் கண்டதாக அவர் கூறினார். அவை கார்களுக்கு அடியில் ஒளிந்துகொள்ளும் என்றும் அவர் கூறினார்.
குடியிருப்பாளர்கள் உதவி கோரியதை அடுத்து அங் மோ கியோ நகர மன்றம் இந்த விவகாரத்தைச் சமாளிக்க முயற்சி மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
குடியிருப்புப் பேட்டை முழுவதும் எலிப்பொறிகள் அமைக்கப்பட்டு, எலிகளைக் கொல்லும் நச்சுப் பொருளும் வைக்கப்பட்டது. இருப்பினும், கூடுதல் நடவடிக்கை தேவை என்பதைத் தன் காருக்கு ஏற்பட்ட சேதம் காட்டுவதாகத் திருவாட்டி குவெக் கூறினார்.
இதுகுறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த நகர மன்றம், புளோக் 628 ஹவ்காங் அவென்யூ 8ன் கார் நிறுத்துமிடத்தில் எலித் தொல்லை குறித்து அறிந்திருப்பதாகக் கூறியது.
கார் நிறுத்துமிடத்தில் சோதனையிட்ட பிறகு, எலி வலைகள் ஏதும் காணப்படவில்லை என்று பூச்சிக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியதாக அது தெரிவித்தது.
இப்போதைக்கு $50 செலவில் மின்னிணைப்புக் கம்பியில் ஏற்பட்ட பழுது சீர்செய்யப்பட்டுவிட்டது என்றும் மீண்டும் அவற்றை எலிகள் பதம் பார்த்தால் ஆயிரக்கணக்கில் செலவிட நேரிடும் என்றும் பழுதுபார்ப்பு நிறுவனம் கூறுகிறது.