புதிய மின்சார உற்பத்தி இயந்திரத்தை (டர்பைன்) அமைக்கும் உரிமை வைடிஎல் பவர்செராயா (ஒய்டிஎல்பிஎஸ்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 2027ஆம் ஆண்டிறுதிக்குள் சிங்கப்பூரின் மின்சார உற்பத்தி ஆற்றல் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் வாயுவைக் கொண்டு இயங்கவிருக்கும் அந்த இயந்திரம் 600 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. ஓராண்டுக்கு 864,000 நான்கறை வீவக வீடுகளுக்கு அதனைக் கொண்டு மின்சாரம் விநியோகிக்க முடியும்.
தற்போது புலாவ் செராயா மின்சார நிலையம் உள்ள பகுதியில் புதிய இயந்திரம் அமையும். 2027ஆம் ஆண்டிறுதிக்குள் அது செயல்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் இயந்திரத்துக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு எரிசக்திச் சந்தை ஆணையம் கேட்டுக்கொண்டது. அக்டோபர் மாதம் 31ஆம் தேதிக்குள் நிறுவனங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கவேண்டியிருந்தது.
இயந்திரத்தை அமைக்கும் பொறுப்பு ஒய்டிஎல்பிஎஸ்-க்கு வழங்கப்பட்டதாக எரிசக்திச் சந்தை ஆணையம் திங்கட்கிழமையன்று (29 ஜனவரி) அறிவித்தது.