முன்னாள் சிறைக் கைதியான நேஷ் (உண்மை பெயரல்ல), 40, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சமுதாயத்துடன் மீண்டும் ஒருங்கிணைய இந்து அறக்கட்டளை வாரியத்தின் ‘ஆஷ்ரம்’ மறுவாழ்வு இல்லத்தை நாடினார்.
ஆஷ்ரமத்தைப் பற்றி எதேச்சையாகக் கேள்விப்பட்ட அவர், நான்கு மாதங்களுக்குத் தன்னைப் போன்ற சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்படும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இன்று அவர் மனதில் தெளிவுடன் காணப்படுகிறார். மேலும், இல்லத்தின் உதவியால் தற்போது ஒரு முழுநேரப் பணியிலும் உள்ளார்.
இரு பிள்ளைகளுக்கு ஒற்றைப் பெற்றோரான அவர், வாழ்வில் முன்னேற்றம் கண்டு சமுதாயம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படியாக ஆஷ்ரம் தன்னை உருமாற்றியதற்கு உணர்ச்சிபொங்க நன்றி கூறினார்.
சிறைக் கைதிகளை நல்வழிபடுத்தி அவர்களை மீண்டும் சமுதாயத்திற்குள் ஒருங்கிணைக்கும் முயற்சிகளைக் கையாண்டு வரும் ஆஷ்ரம், நேஷ் போன்றவர்களின் பயணங்களை முன்னிலைப்படுத்தவும் அதன் 25வது ஆண்டுவிழா கொண்டாட்டமாகவும் சமூக நிகழ்வொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
தற்போது ஆஷ்ரமத்தில் இருப்பவர்கள், இதற்கு முன்னர் ஆஷ்ரமத்திற்கு வந்து சென்றவர்கள், அவர்களின் குடும்பத்தினர் உட்பட, தொண்டூழியர்கள், ஆஷ்ரமத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) காலையில் ஆஷ்ரமத்தின் வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
மற்றொருவரான ராஜ் (உண்மை பெயரல்ல), 20 ஆண்டுகளுக்கு முன்னர் தன் கல்வியைக் கைவிட்டவர். இன்று அவர் தனது 39 வயதில் பட்டயக் கல்வி மேற்கொண்டு வருகிறார். அது ஆஷ்ரமத்திற்கு வந்ததால்தான் சாத்தியமானது என்றார் அவர்.
“நான் போதைப் புழக்கத்தினால் சிறைக்குச் சென்றேன். தண்டனையின் இறுதிக் காலத்தை ஆஷ்ரமத்தில் கழித்தேன். இங்கு வராமல் இருந்திருந்தால் மீண்டும் கல்விப் பாதையில் அடி எடுத்து வைக்க எனக்கு உந்துதல் கிடைத்திருக்காது,” என்றார்.
நேஷ், ராஜ் போன்றவர்களின் மறுவாழ்வு தொடர்பில் பல தொண்டூழியர்களின் உதவி முக்கியப் பங்காற்றுகிறது. தொண்டூழியர்கள் ஆஷ்ரமத்திற்கு வந்து யோகா பயிற்சிகளை நடத்துவது, இதர திட்டங்களை வழிநடத்துவது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.
அவ்வாறு கடந்த 12 ஆண்டுகளாக ஆஷ்ரமத்தில் தொண்டூழியராக இருக்கும் ஸ்ரீனிவாஸ், 53, ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பைப் பிரதிநிதித்து, ஆஷ்ரமத்தில் இருப்பவர்களுக்கு யோகா பயிற்சிகளை நடத்தி வருகிறார்.
கைதிகளை நல்வழிப்படுத்த யோகா ஒரு சிறந்த கருவி என்ற அவர், “பெரும்பாலான கைதிகள் வேறோர் உலகத்திலிருந்து மீண்டும் நம் சமுதாயத்திற்குள் அடியெடுத்து வைக்க முதலில் தடுமாறுவார்கள். அவர்களின் சிந்தை தெளிவாக இருக்காது. அதை முதலில் நாம் ஒருநிலைப்படுத்தி அவர்களை நிதானப்படுத்த வேண்டும்,” என்று சொன்னார்.
நிகழ்வில் 17 பங்காளித்துவ அமைப்புகள் சிறைக் கைதிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைக்கச் சமூகத்தின் பங்கு இன்றியமையாதது என்பதை வலியுறுத்தும் வகையில் சாவடிகளை அமைத்திருந்தனர்.
ஆஷ்ரமத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரான, மேக்ஸ் மாறன், 56, “நாங்கள் கைதிகளுக்கு மேலும் அதிக திட்டங்களை உருவாக்கியுள்ளோம். யோகா ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு புதிதாக விலங்குசார் சிகிச்சையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் கைதிகள் பயனடைவார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.