இவ்வாண்டு முதல் சுடோங் தீவின் (புலாவ் சுடோங்) கிழக்குப் பகுதிக்கு அருகே நில மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தற்போது ஆகாயப் படை விமானங்களுக்கான ஓடுபாதை உள்ளது. அதை மேம்படுத்துவதற்காக நில மீட்புப் பணிகள் மேற்கோள்ளப்படவுள்ளன.
இதனால் அங்கு இரண்டு ஹெக்டர் பரப்பளவு கொண்ட பகுதியில் பல கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துபோகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில மீட்புப் பணிகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க அரிய வகை உயிரினங்களையும் பாதிப்புக்கு உள்ளாகும் சாத்தியம் அதிகம் உள்ள உயிரினங்களையும் அதிகாரிகள் இடம் மாற்றுவர் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 26) கூறியது. நில மீட்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் உயிரினங்கள் அவை முன்பிருந்த பகுதியில் விடப்படும் என்று கழகம் குறிப்பிட்டது.
சுடோங் தீவின் கிழக்குப் பகுதிக்கு அருகே சுமார் 31.1 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட நீர்ப்பகுதி நிலமாக்கப்படும். அது, 43 காற்பந்துத் திடல்களின் பரப்பளவுக்குச் சமமாகும்.
நில மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள பகுதி, 1970களிலிருந்து ராணுவப் பயன்பாட்டுக்கென ஒதுக்கப்பட்டதாகும்.
விமானப் பாதுகாப்பை வலுப்படுத்த ஓடுபாதையை மேம்படுத்தும் நோக்கில் அவ்வாறு செய்யப்பட்டது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் குறிப்பிட்டது. குறிப்பாக மோசமான வானிலை இருக்கும்போது இது பொருந்தும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குக் கழகம் பதிலளித்தது.
மேலும், நிலமாக்கப்படும் பகுதியைச் சுற்றி கடற்சுவர் எழுப்பப்படும். நில மீட்புப் பணிகளால் அப்பகுதி உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.