அடுத்த பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் தாம் போட்டியிடக்கூடும் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டாக்டர் டான் செங் போக் கொடிகாட்டியிருக்கிறார்.
அக்குழுத்தொகுதியின் மக்கள் செயல் கட்சி (மசெக) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலைமை பொறுப்பேற்றிருந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தமது அரசியல் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டதால் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் மேம்பட்டுள்ளதாக டாக்டர் டான் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 2020 பொதுத் தேர்தலில் 83 வயதாகும் டாக்டர் டான் தலைமையில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் மக்கள் செயல் கட்சியிடம் தோல்வி கண்டது.
திரு ஈஸ்வரன் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு, வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியை 51.68% வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றியது. அது 2020 பொதுத் தேர்தலில் மசெக பெற்ற ஆகக் குறுகிய வித்தியாச வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1997ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த திரு ஈஸ்வரன், தமது அரசியல் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக பிரதமர் லீ சியன் லூங்குக்கு ஜனவரி 16ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தார். பின்னர் ஜனவரி 18ஆம் தேதி அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஜனவரி 27ஆம் தேதி வெஸ்ட் கோஸ்ட் சந்தையில் தனது தொகுதிச் சுற்றுலாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் டான், “துடிப்பாக மூப்படைதல் பற்றி உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நான் ஓய்வுபெறக் கூடாதுதானே! வயது ஒரு தடையில்லை என்றால் நான் தேர்தல் களத்தில் இருப்பேன்,” என்றார்.
2025 நவம்பர் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டிய அடுத்த பொதுத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, “நான் இல்லை என்று சொல்லவில்லையே!” என்று பதிலளித்தார்.
2020 பொதுத் தேர்தல் சமயத்திலும் அதற்குப் பிறகு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அக்குழுத்தொகுதியில் வாக்காளர்களைச் சந்தித்து வந்துள்ளது என்றும் அது மேலும் தொடரும் என்றும் தெரிவித்த டாக்டர் டான், திரு ஈஸ்வரன் பதவி விலகியது தமது கட்சிக்குச் சாதகமாக அமையும் என்று தாங்கள் நம்புகிறோம் என்றும் வாக்காளர்களின் முடிவுதான் இதில் முக்கியம் என்றும் கூறினார்.
“நாடாளுமன்றத்தில் நாங்கள் எப்படிச் செயல்பட்டு வருகிறோம் என்று மக்கள் பார்த்திருக்கிறார்கள். முடிவு அவர்கள் கையில்தான் உள்ளது,” என்றும் டாக்டர் டான் சொன்னார்.
“திரு ஈஸ்வரனின் குற்றவியல் வழக்கு எங்களுக்குச் சாதகமாக அமையும் என்று நினைப்பது தவறு,” என்றார் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி துணைத் தலைவர் ஹேசல் புவா. “தேர்தலில் பல அம்சங்கள் முடிவுகளை நிர்ணயிக்கின்றன. இந்த ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று கருத முடியாது. திரு ஈஸ்வரனுக்குப் பதிலாக யார் அவர் இடத்தில் நிறுத்தப்படப் போகிறார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம்,” என்றும் கருத்துரைத்தார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் முன்பு மாதத்துக்கு ஒரு முறை என்றிருந்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் குடியிருப்பாளர்கள் சந்திப்பு, இப்போது வாரத்துக்கு ஒரு முறை என்று நடத்தப்படும் என்றார் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் திரு லியோங் மன் வாய்.