பண்டார் ஸ்ரீ பகவான்: அதிபர் தர்மன் சண்முகரத்னம் புருணைக்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
புருணை அரசர் ஹசனல் போல்கியாவின் அழைப்பை ஏற்று அதிபர் தர்மன் புருணை சென்றுள்ளார்.
ஜனவரி 24ஆம் தேதியிலிருந்து ஜனவரி 26ஆம் தேதி வரை அவர் அங்கு இருப்பார்.
அவருடன் அவரது துணைவியார் திருவாட்டி ஜேன் இட்டோகி சண்முகரத்னமும் சென்றுள்ளார்.
அதிபர் பதவியை ஏற்ற பிறகு இதுவே திரு தர்மனின் முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணம்.
பயணத்தின் முதல் நாளன்று, புருணையில் வசிக்கும் சிங்கப்பூரர்களை அதிபர் தர்மனும் அவரது துணைவியாரும் சந்தித்தனர்.
ராயல் புருணை போலோ அண்ட் ரைடிங் கிளப்பில் உள்ள ராயல் பெர்க்ஷியர் மண்டபத்தில் ஏறத்தாழ 400 விருந்தினர்களிடம் அதிபர் தர்மன் பேசினார்.
வெளிநாடுகளில் சிங்கப்பூருக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுப்பதில் வெளிநாடு வாழ் சிங்கப்பூரர்கள் பெருமளவில் பங்களிப்பதாக அவர் கூறினார்.
வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்குப் பல்வகை அனுபவங்கள் கிடைக்கும் என்றும் அவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்பும்போது அவை நாட்டுக்குப் பலனைத் தரும் என்றும் அதிபர் தர்மன் தெரிவித்தார்.
புருணை வாழ் சிங்கப்பூரர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிங்கப்பூர் தூதரகத்துக்கு அதிபர் தர்மன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.