சிங்கப்பூரும் மலேசியாவும் உரிமை கொண்டாடிய பெட்ரா பிராங்கா உள்ளிட்ட மூன்று தீவுகள் தொடர்பாக அனைத்துலக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் திட்டம் 2018ஆம் ஆண்டில் மலேசியாவால் கைவிடப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட அந்த முடிவு குறித்து ஆய்வு நடத்த அரச விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க மலேசியா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இது மலேசியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் விசாரணை நடத்த மலேசியா எடுத்துள்ள முடிவு இருதரப்பு உறவை எவ்வகையிலும் பாதிக்காது என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (ஜனவரி 25) தெரிவித்தது.
2008ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதியன்று பெட்ரா பிராங்கா சிங்கப்பூருக்குச் சொந்தமானது என்று அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்ததை சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு சுட்டியது.
“அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதி முடிவாகும் என்றும் நீதிமன்றத்தின் முடிவு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் சிங்கப்பூரும் மலேசியாவும் பகிரங்கமாக அறிவித்துவிட்டன,” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
பெட்ரா பிராங்கா, மிடல் ராக்ஸ், சவுதர்ன் லெட்ஜ் ஆகிய மூன்று தீவுகள் தொடர்பான வழக்குகள் கையாளப்பட்ட விதம் குறித்து ஆய்வு நடத்த அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகம்மது ஸுகி அலி ஜனவரி 24ஆம் தேதியன்று தெரிவித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு திரு நஜிப் ரசாக் பிரதமராக இருந்தபோது, புதிய சான்று தன்னிடம் இருப்பதால் 2008ஆம் ஆண்டில் அனைத்துலக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் மனுத்தாக்கல் செய்தது. அதன் தொடர்பில் 2018 ஜூன் மாதம் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆயினும், 2018ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வென்று, டாக்டர் மகாதீர் முகம்மது பிரதமராகப் பதவியேற்ற பிறகு, தீர்ப்பை மறுஆய்வு செய்வது குறித்த திட்டம் கைவிடப்பட்டது.