வயதான தன் தாயை தலையணையை வைத்து மூச்சுத் திணறச் செய்து கொலை செய்ய முயன்றதாக ஆடவர் ஒருவர்மீது புதன்கிழமை (ஜனவரி 24) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால், அந்த ஆடவர் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
ஜனவரி 16ஆம் தேதி சிராங்கூன் சென்ட்ரலில் நடந்ததாகக் கூறப்படும் இந்தக் கொலை முயற்சி குறித்து, ஜனவரி 18ஆம் தேதியன்று காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தன் தாயைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி, 34 வயதான யோங் சுன் ஹாங் மீது சுமத்தப்பட்டது.
கைவிலங்குடன் காணப்பட்ட யோங் சுன் ஹாங், காணொளி இணைப்பு மூலம் நீதிமன்ற விசாரணையில் முன்னிலையானார் என்று கூறப்படுகிறது.
அவர் தன் தாயைப் பார்க்க இரண்டு முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.
மாவட்ட நீதிபதி பிரெண்டா டான் காவல்துறை வழக்கறிஞரிடம் யோங்கினுடைய தாயின் நிலையைப் பற்றி கேட்டபோது, தற்போது அவருடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்புவதாகக் கூறினார்.
யோங்கிற்கு மனநலப் பரிசோதனை செய்வதற்காக அவரை சாங்கி சிறை மருத்துவ மையத்தில் தடுப்புக் காவலில் வைத்திருக்க உத்தரவிடும்படி வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
வழக்கு விசாரணை மீண்டும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று தொடரும்.