சிங்கப்பூரர்களைக் குறிவைத்து அவர்களின் நண்பர்களைப் போல நடித்து தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்திகள் மூலம் தொடர்புகொண்டு பணம் கேட்டு ஏமாற்றியதாக ஐந்து மலேசிய ஆடவர்கள் மீது ஜனவரி 24ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த ஐவரிடம் ஏமாந்தவர்களுக்கு மொத்தம் $1.4 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
19 வயது கெக் யுவான் சுன், 23 வயது சுவா சி ஹுவாங், 25 வயது ஹெங் குவோ ஹாவ், 35 வயது லோ சுவான் ஷெங், 36 வயது யீ கொங் யாவ் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஜனவரி 16ஆம் தேதின்று மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள இரண்டு அடுக்குமாடி வீடுகளில் மலேசியக் காவல்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தியதை அடுத்து, இந்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஜனவரி 23ஆம் தேதியன்று சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தக் கும்பல் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கும்பல் 500 மோசடிப் புகார்களுடன் தொடர்புடையது என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை நண்பர்களாக நடித்து தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்திகள் மூலம் தொடர்புகொண்டு பணம் கேட்டு ஏமாற்றியவர்கள் விரித்த வலையில் 6,300க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
இத்தகைய மோசடிக் குற்றங்களால் ஏற்பட்ட இழப்பு குறைந்தபட்சம் $21.1 மில்லியன்.
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.