கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் சந்தித்த வர்த்தகச் சிக்கல்களால் மூடப்பட்ட பிரபல உணவகமான சரவண பவன், மூவாண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 23ஆம் தேதியன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டுவரை ஆறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த அந்த உணவகம் தற்போது லிட்டில் இந்தியாவில் உள்ள ‘சென்ட்ரியம் ஸ்குவேர்’ முதல் தளத்தில் மீண்டும் திறக்கப்படுகிறது.
பெருந்தொற்றுக் காலக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும், மனிதவளப் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டு அந்த உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகச் சொல்கிறார் அவ்வுணவகத்தை நடத்த உரிமம் பெற்றுள்ள ஒருவரான கோல்கத்தாவைச் சேர்ந்தவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான அஷோக் சௌத்ரி.
“சரவண பவன் அனைத்துலக அளவில் பிரபலமான தென்னிந்திய உணவகம். அத்துடன், தற்போது மனிதவளச் சிக்கல்கள் தளர்ந்துள்ளதாலும், நல்ல சைவ உணவகத்தை நாடும் மக்கள் அதிகரித்திருப்பதாலும் இவ்வுணவகத்தை மீண்டும் திறக்க இதுவே சிறந்த நேரம்,” என்றார் திரு அஷோக்.
பசுமையான, நவீன உட்புற வடிவமைப்பு, உயரமான உட்கூரையுடன் நூறு இருக்கைகளுடனும், உணவு வாங்கிச் செல்பவர்களுக்கென தனி சமையலறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளன. சமண, இந்தோ - சீன வகை, ஐஸ்கிரீம், ஸ்மூதி எனும் மிருதுவாக்கப்பட்ட பானங்கள் உட்பட 550க்கும் மேற்பட்ட உணவுவகைகள் அவர்களது உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் திரு அஷோக் குறிப்பிட்டார்.
உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள், பெருநிறுவன வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் மூன்று நேர உணவு வழங்கும் வகையில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை உணவகம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தலப்பாகட்டு பிரியாணி எனும் பிரபல உணவகத்தை ஆறு ஆண்டுகளாக நடத்தி வருபவரும், தளவாட, விநியோகத் தொடர் மேலாண்மையில் அனுபவம் பெற்றவருமான திரு அஷோக், “இந்த உணவகத்தில் பாரம்பரிய தென்னிந்திய சமையல் செய்வதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து சமையல் கலைஞர்களும் நிர்வாகம் உள்ளிட்ட பிற பணிகளுக்காக 15 பேரும் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
மேலும், “லிட்டில் இந்தியாவில் சைவ உணவுக் கடைகள் பல இயங்குவதால், போட்டி அதிகம். அதனால் புதுமையான உணவு வகைகளை அறிமுகம் செய்வதோடு, செயற்கை நிறம், சுவையூட்டிகள் பயன்பாட்டைத் தவிர்த்து, சிறந்த உணவைத் தர உழைப்போம்,” என்கிறார் அவர்.
கடந்த 1981ஆம் ஆண்டு தொடங்கி உலகெங்கிலும் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் சரவண பவன் உணவகத்தின் கிளையை தற்போது சிங்கப்பூரில் மீண்டும் திறக்கும் திரு அஷோக்கும் அவருடைய குழுவினரும், எதிர்காலத்தில் இன்னும் பல கிளைகளையும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் திறக்க எண்ணம் கொண்டுள்ளனர்.