தனது வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பறித்து சிறைத் தண்டனையை நிறைவேற்றிய ஒருவர் மீண்டும் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.
குற்றவாளியான யூஜீன் சியா சியன் யாவ், தான் புதிதாகச் சேர்ந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இருவரிடமிருந்து 77,200 வெள்ளியைப் பறித்திருக்கிறார்.
முன்னதாக 2020ல் இதே குற்றத்தைப் புரிந்ததற்காக அவருக்கு 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தில் புதுப்பிப்பு வடிவமைப்பாளராகப் பணிபுரிந்த சியா, அந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியோரை ஏமாற்றி 134,000 வெள்ளியைப் பறித்தார். 2021ஆம் ஆண்டு மே மாதம் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் கைதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு ஊக்குவிக்கும் மஞ்சள் நாடா திட்டத்தின் மூலம் வந்த பரிந்துரையின் உதவியோடு சியா வேறொரு புதுப்பிப்புப் பணி நிறுவனத்தில் சேர்ந்தார்.
புதுப்பிப்புத் திட்டங்களைப் பற்றிக் கலந்துபேசி வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் பெறுவது அவரது பொறுப்பாக இருந்தது.
அந்நிறுவனத்தில் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர், இரு வாடிக்கையாளர்களிடமிருந்து 77,200 வெள்ளித் தொகையைப் பறித்தார்.
நம்பிக்கை துரோகம் இழைத்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை வெள்ளிக்கிழமையன்று ஒப்புக்கொண்ட சியாவுக்கு 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட அனைவரிடமும் அவர் பணத்தை முழுமையாகத் திரும்பக் கொடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.