வேலையிடப் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளருக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டை இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புக்கொண்டதாக மனிதவள அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்தது.
அவர்களில், திங் தேஜுவுக்குக் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி எட்டுமாதச் சிறைத்தண்டனையும் செயோக் கோக் சாவுக்குக் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி ஐந்து மாதச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு திங், சியோங் கட்டுமானம், பொறியியல் நிறுவனத்தில் தள மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி தற்காலிக பொருட்சேமிப்பு அறையை வேறு இடத்திற்கு மாற்றும்படி 11 தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
அப்பணியை மேற்கொள்ளும்போது தொழிலாளர் ஒருவர் 6 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார். டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அதே நாளில் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவ்விடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதைக் கண்டறியாமல் தொழிலாளர்களை அப்பணியை திங் மேற்கொள்ள செய்தார் என அமைச்சு கண்டறிந்தது.
வேறொரு சம்பவத்தில், ‘சினர்ஜி-பிஸ்’ நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்த டான் டியோங் சீ, பளுதூக்கும் வாகனம் ஏறியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி நடந்தது. பளுதூக்கும் வாகனத்தை வேறோர் இடத்துக்குக் கொண்டுசெல்ல அதை லாரியில் அவர் ஏற்றிக்கொண்டு இருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது.
கூ தெக் புவாட் மருத்துவமனைக்கு சீ கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அதே நாளில் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு லாரியில் இயந்திரங்களை ஏற்றும்போதும் இறக்கும்போது ஏற்படும் அபாயங்கள் குறித்து ‘சினர்ஜி-பிஸ்’ நிறுவனம் மதிப்பீடு நடத்தவில்லை எனவும் தொழிலாளருக்கு அவ்வேலையைச் செய்ய முறையான பயிற்சியை அந்நிறுவனம் அளிக்கத் தவறிவிட்டது எனவும் மனிதவள அமைச்சு நடத்திய விசாரணையில் கண்டறிந்தது.
இதனால், அந்நிறுவனத்தின் இயக்குநரான செயோக் கோக் சாவ் கைது செய்யப்பட்டார்.
“இவ்விரு நிகழ்வுகளும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் குறைப்பாட்டை அப்பட்டமாக பிரதிபலிக்கின்றன. இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு மரணம் ஏற்பட்டது. தொழிலாளர் நலனும் வர்த்தகமும் சிறப்படைய, பணியிடங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய நாம் அனைவரும் பங்காற்ற வேண்டும்,” என அமைச்சு கூறியது.
மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் முதலாளிகளையும் தொழிலாளர்களையும் அமைச்சு தீவிரமாகக் கண்காணிக்கிறது. மேலும் தவறுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கத் தயங்காது,” என அது மேலும் தெரிவித்தது.
2020ஆம் ஆண்டு 30 வேலையிட மரணங்களும் 2022ஆம் ஆண்டு 46 வேலையிட மரணங்களும் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.