தீவு விரைவுச்சாலையில் கவனமில்லாமல் வேனை ஓட்டி விபத்து ஏற்படுத்திய 18 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஆடவரிடம் சரியான ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
விபத்து கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி காலை 7:35 மணிவாக்கில் நடந்தது. தோ குவான் சாலை முடிவுக்கு பின் துவாசை நோக்கிச் செல்லும் விரைவுச்சாலையில் ஆடவர் ஓட்டி வந்த வேன் மற்றோர் கனரக வாகனத்தின் மீது பலமாக மோதியது.
அதனால் அந்த வேன் தலைகீழாக சுழன்று விழுந்தது. அதில் இருந்த இருவரும் விபத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் மீட்புப் கருவிகளைக் கொண்டு மீட்டனர்.
வேனில் இருந்த 21 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக மருத்துவ உதவியாளர்கள் கூறினர்.
மீட்கப்பட்ட 18 வயது ஆடவர் சுயநினைவுடன் இருந்தார். அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து தொடர்பான படங்கள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு இருந்தன.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.