உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதை, மறுகட்டுமானப் பணிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு (2024) மத்தியில் பொதுமக்களுக்கு முழுமையாகத் திறக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2022 செப்டம்பரில் நிலச்சரிவால் அந்த இணைப்புப் பாதையின் ஒரு பகுதி சேதமடைந்தது. அதன் மறுகட்டுமானப் பணிகள் 2023 டிசம்பரில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த இடத்தில் மீண்டும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்குமுன் மண்ணின் நிலைத்தன்மையை உறுதிசெய்ய மண்ணின் தரத்தை அணுக்கமாகக் கண்காணித்ததாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) கூறியது. டிசம்பர் 29ஆம் தேதி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அது அவ்வாறு குறிப்பிட்டது.
கனமழை, மேம்பட்ட பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட கூடுதல் வலுவூட்டும் பணிகள், கட்டுமான வடிவமைப்பிற்கான மறுமேம்பாடு போன்ற காரணங்களால் மறுகட்டுமானப் பணிகள் நிறைவடைவது தாமதமானதாகக் கழகம் கூறியது.
2022ஆம் ஆண்டு டிசம்பரில் அந்த மறுகட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் இன்னும் முடிவடையாததற்கு மூன்று முக்கியக் காரணங்களை அது எடுத்துரைத்தது.
முதலாவதாக, சிங்கப்பூரில் 2023 மார்ச் முதல் ஜூன் மாதம் வரை வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்தது. பின்னர் 2023 நவம்பரில் கட்டுமானத் தளத்தில் சூழல் சரியில்லை.
“கட்டுமானத் தளத்தில் மண் உறுதியாக இல்லாத நிலையில் அங்கு பெய்த மழை நீரைப் பொது வடிகாலுக்குள் வெளியேற்றுவதற்கு முன்பாக அதை உரிய வகையில் சுத்திகரிக்க வேண்டியிருந்தது.
“கிளமெண்டி நார்த்ஆர்க் பிடிஓ வீடுகளில் புதிதாகக் குடியேறியவர்களுக்கு இரைச்சல் பாதிப்பைத் தவிர்க்க வேலை நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது,” என்று கழகம் கூறியது.
இரண்டாவதாக, பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, சரிவான பகுதியின் நிலைத்தன்மையை மேம்படுத்தக் கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கூடுதலான பரப்பு வலுவூட்டப்பட்டது.
மூன்றாவதாக, திட்டமிடப்பட்ட மறுகட்டுமானப் பணிகளின் வடிவமைப்பை வீவக மேலும் மேம்படுத்தியது. கூடுதல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, சரிவில் எடையை மேம்பட்ட முறையில் பரவலாக்க, படிகளும் சாய்வுப் பாதைகளும் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டன.
இவற்றால் பணி தாமதமானது என்று வீவக சொன்னது.
உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதையின் கிழக்குப் பகுதியில் மறுகட்டுமானப் பணிகள் 2023 டிசம்பரில் முடிவடைந்தன. இதர அமைப்புகளுடன் இணைந்து வீவக அங்கு தேவையான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். பின்னர் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் அந்தப் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும்.