பாலர் பள்ளியிலிருந்து தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள திட்டம் ஒன்று கைகொடுக்கிறது.
என்டியுசி என்ஃப்சி என்னும் திட்டத்தின் ஒரு பிரிவான வகுப்பறை ஆதரவுத் திட்டத்தின் (சிஎஸ்பி) மூலம் பலனடைந்தவர்களில் கலிலா ஹெர்மான் என்னும் குழந்தையும் அடங்கும்.
பொங்கோல் வட்டாரத்தில் உள்ள எட்ஜ்ஃபீல்ட் பிளெய்ன்ஸ் குடியிருப்புப் பகுதியில் ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பாலர் பள்ளியில் 2020ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்த அந்தப் பெண் குழந்தைக்கு தற்போது ஆறு வயது.
ஜனவரி 2ஆம் தேதி எட்ஜ்ஃபீல்ட் தொடக்கப் பள்ளியில் அவர் தமது அடுத்தகட்ட கல்விப் பயணத்தைத் தொடங்க உள்ளார்.
மழலைப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு மாணவராக இருந்தபோது கலிலாவுக்கு கற்கும் திறன்களை வளர்க்க உதவி தேவைப்பட்டது.
படிப்பதிலும் எழுதுவதிலும் அவரிடம் வேகம் குறைவு. வகுப்பறையில் கேட்கப்படும் கேள்விக்குப் பதிலளிக்க சிரமப்பட்டார். ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களைப் படிப்பது அவருக்கு சவாலாக இருந்தது.
சிஎஸ்பி திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அவருக்கு தொடக்கத்தில் எண்ணெழுத்துத் திறன்களை ஊட்டினர். கொஞ்சம் கொஞ்சமாக அவரது திறன் வளர்ந்தது. இன்றைக்கு கலிலா பாடங்களை வேகமாக வாசிக்கிறார்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சிஎஸ்பி திட்டம், மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் பயிலும் குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்விக்கான செயல்திறன்களையும் சமூக உணர்வையும் வளர்க்க கூடுதல் உதவி வழங்குகிறது.