கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை தொடர்ந்து நான்கு மாதங்களாக குறைந்துள்ளன. இதற்கு மாறாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான வாடகை சற்று அதிகரித்துள்ளது.
அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை கடந்த மாதம் 1.4 விழுக்காடு குறைந்தது. இந்தத் தகவலை சொத்துச் சந்தைத் தளங்களான எஸ்ஆர்எக்ஸ், 99.co ஆகியவை டிசம்பர் 27ஆம் தேதியன்று வெளியிட்டன.
மத்திய வட்டாரத்தில் உள்ள மையப் பகுதிகளில் இருக்கும் கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகையும் மத்திய வட்டாரத்தில் உள்ள மற்ற பகுதிகளில் உள்ள கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகையும் 2 விழுக்காடு குறைந்தன.
மத்திய வட்டாரத்துக்கு வெளியே இருக்கும் பகுதிகளில் உள்ள கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகையில் மாற்றம் இல்லை.
ஆண்டு அடிப்படையில் ஒட்டுமொத்த வாடகை கடந்த ஆண்டு நவம்பரைவிட 6.3 விழுக்காடு அதிகம்.
2020ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை கடந்த மாதம் ஆகக் குறைவாகப் பதிவானது என ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு மார்க் யிப் தெரிவித்தார்.
“டிசம்பர் 2023ல் கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை ஏற்றம் காணாது. இதுதான் கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு வாடகை அதிகரிக்காத முதல் ஆண்டாகும்,” என்றார் அவர்.
இதற்கிடையே, நவம்பர் மாதத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான வாடகை அதிகரித்தது.
அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தில் வாடகை 0.8 விழுக்காடு உயர்ந்தது.
முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள வீவக வீடுகளுக்கான வாடகை ஒரு விழுக்காடு ஏற்றம் கண்டது. முதிர்ச்சி அடையாத வட்டாரங்களில் உள்ள வீவக வீடுகளுக்கான வாடகை 0.6 விழுக்காடு அதிகரித்தது.
அனைத்து வகை வீவக வீடுகளுக்கான வாடகை ஏற்றம் கண்டது. எக்சிக்யூட்டிவ் வீடுகளுக்கான வாடகை 1.7 விழுக்காடும் நான்கறை வீடுகளுக்கான வாடகை 0.9 விழுக்காடும் ஐந்தறை வீடுகளுக்கான வாடகை 0.7 விழுக்காடும் மூவறை வீடுகளுக்கான வாடகை 0.4 விழுக்காடும் உயர்ந்தன.
ஆண்டு அடிப்படையில் வீவக வீடுகளுக்கான ஒட்டுமொத்த வாடகை 12 விழுக்காடு ஏற்றம் கண்டது.