தொழில்துறைப் பகுதிகளில் காலியாக இருக்கும் கட்டடங்களில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை அதிகாரிகள் முறியடித்து வருகின்றனர்.
அத்தகைய கட்டடங்களில் சட்டவிரோதக் குடியேறிகள் ஒளிந்துகொள்ளப் பயன்படுத்துபவையும் அடங்கும்.
சிங்கப்பூர் காவல்துறையும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் இணைந்து செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 5) முறியடிப்பு நடவடிக்கை மேற்கொண்டன. ஜேடிசி கார்ப்பரேஷன் அமைப்பின் ஆதரவுடன் நடவடிக்கை மேற்கொள்ளபப்ட்டது.
சுங்கை காடுட் தொழிற்பேட்டையில் சட்டவிரோதக் குடியேறிகள் உட்பட அனுமதியின்றி செயல்படுவோரைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்ட அமலாக்க அதிகாரிகள் சோதனையை முடித்த பிறகு சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்ல ஊடகத் துறையினர் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நடவடிக்கையில் யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும், காலியாக இருந்த ஒரு கட்டடம் போதைப்பொருள் கூடமாகப் பயன்படுத்தப்பட்டதற்கு அறிகுறியாக அதிகாரிகள் சில பொருள்களைக் கண்டுபிடித்தனர். மேலும், 90 சென்டிமீட்டர் அகலத்தையும் 200 சென்டிமீட்டர் ஆழத்தையும் கொண்ட ஒரு சாக்கடையை அதிகாரிகள் மூடி வைத்தனர்.
முன்பு தொழிற்சாலைகளாகப் பயன்படுத்தப்பட்ட ஓர் இரு தளக் கட்டடத்திற்கு சுமார் 100 மீட்டர் தொலைவில் அந்த சாக்கடை உள்ளது. அக்கட்டடத்தைச் சுற்றி வேலியும் வளாகக் கதவுகளும் (கேட்) உள்ளன. ஆனால், உலோக துவாரத்தின்வழி அந்த சாக்கடையைச் சென்றடைய முடியும்.
அந்த துவாரத்திற்குள் சுமார் 10 மீட்டர் தூரம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்று பார்த்தபோது அங்கு கயிறு ஒன்றில் ஆடைகள் காய வைக்கப்பட்டிருந்ததும் தற்காலிகப் பயன்பாட்டுக்கு செய்யப்பட்டிருந்த கட்டிலின் மேல் மெத்தை இருந்ததும் தெரிந்தன.
மெத்தை மேல் காலி பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட பொருள்கள் காணப்பட்டன. இதுபோல் அப்பகுதியில் சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றதற்கான அறிகுறிகள் பல இருந்தன.
காவல்துறையின் கே-9 பிரிவு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. ஆளில்லா வானூர்தியும் பயன்படுத்தப்பட்டது. இந்த விவகாரம் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு 57 சட்டவிரோதக் குடியேறிகள் கைதுசெய்யப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டன. 2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 56 ஆக இருந்தது. 2020ஆம் ஆண்டும் 57 பேர் கைதாயினர்.