270,000 வெள்ளியை கையாடல் செய்ய உதவிய குற்றத்திற்காக எட்டி ஓங் வெய் சியான் என்ற ஆடவருக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லேக் தாய் யோங் என்ற நபருக்கு ஓங் உதவியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஓங் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வியாழக்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
லேக் மின்னிலக்க நாணயங்களை நிர்வாகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஓங்குடன் இணைந்து தன் நிறுவனத்தின் மூலம் பங்குகள் வாங்கும் நபரை ஏமாற்றத் திட்டமிட்டார்.
நாணயங்களை நிர்வாகம் செய்த நிதியை லேக் பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள ஒரு கார் நிறுத்தும் இடத்தில் திருடப்பட்டது போல் கதையை உருவாக்கி ஓங்குடன் சேர்ந்து மோசடி செய்துள்ளார்.
காவல்துறை நடத்திய விசாரணையில் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.
ஓங் தற்போது பிணையில் உள்ளார். அவர் நவம்பர் 30ஆம் தேதி முதல் சிறைக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
லேக் மீதான விசாரணை தொடர்கிறது.