விற்பனை மற்றும் நுகர்வோர் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் லிட்டில் இந்தியாவில் உள்ள கடைகள் உட்பட 14 மதுபானக் கடைகளில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அக்டோபர் 28ஆம் தேதியிலிருந்து நவம்பர் 12ஆம் தேதி வரை காவல்துறை அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.
அப்போது விதிமீறல்கள் நடந்தது குறித்து தெரிய வந்தது.
கிளைவ் ஸ்திரீட், டன்லப் ஸ்திரீட்டில் உள்ள நான்கு கடைகளில் வாடிக்கையாளர்கள் கூடி குடிப்பதற்காக மறைவான இடம் ஏற்படுத்தப்பட்டிருந்தது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக நவம்பர் 23ஆம் தேதி காவல்துறை தெரிவித்தது.
இதுபோன்று கடைகளில் குடிப்பதற்கு அனுமதியில்லை. இத்தகைய மதுபானக் கடைகள் அங்கேயே குடிப்பதற்கான உரிமத்தைப் பெற்றிருக்கவில்லை.
மதுபானக் கட்டுப்பாட்டு வட்டாரத்தில் உள்ள மதுபானக் கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.00 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரையிலும் சனிக்கிழமை, ஞாயிறு, பொது விடுமுறைக்கு முந்தைய நாள், பொது விடுமுறை ஆகிய நாள்களிலும் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படுகிறது.
மதுபானக் கட்டுப்பாட்டு வட்டாரத்தில் இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
உரிமம் இல்லாமல் மதுபானங்களை விநியோகிக்கும் குற்றத்திற்கு 20,000 வெள்ளி வரை அபராதமும் இதே குற்றத்தை மீண்டும் செய்தால் மறுபடியும் 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.