தெருநாய்களின் எண்ணிக்கையை நிர்வகிக்கும் வகையில் தொடங்கப்பட்ட அரசாங்கத்தின் கருத்தடைத் திட்டத்தின் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் 80 விழுக்காடு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நீடிக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாய்களைப் பிடித்து, அவற்றுக்குக் கருத்தடை செய்து அவற்றுக்கு புதிய வீடு பெற்றுத் தருவது அல்லது மீண்டும் அவற்றை விடுவிப்பது என்று நான்கு அடுக்கு அணுகுமுறையைக் கொண்ட அந்தத் திட்டம் (டிஎன்ஆர்எம்) விலங்கு, கால்நடை சேவையால் (ஏவிஎஸ்) 2018 நவம்பரில் தொடங்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்குள் சிங்கப்பூரில் சுற்றித் திரியும் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான நாய்கள் கருத்தடை செய்வது இலக்கு. இதுவரையில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு விட்டது என்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் அமைச்சர் லீ கூறினார்.
இதுவரை 4,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 1,891 நாய்களுக்கு புதிய வீடுகளுக்கு அனுப்பட்டன, 709 நாய்க்குட்டிகள் வளர்ப்பதற்காக அல்லது பராமரிப்புக்காகக் கொடுக்கப்பட்டன.
புதிய வீடுகளுக்கு அனுப்பவோ, வளர்க்கவோ, பராமரிக்கவோ முடியாத 1,347 நாய்கள் இயற்கையாகவே வாழக்கூடிய பொருத்தமான இடங்களுக்கு விடுவிக்கப்பட்டன என்று திரு லீ கூறினார்.
டிஎன்ஆர்எம் திட்டம் 2014 ஏப்ரலில் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பயணத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது. அங்கு அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் திரியுப் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் வகுக்கப்பட்டது என்றார் அவர்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தெருநாய்கள் குறித்த பொதுமக்கள் புகார்கள் 70 விழுக்காடு குறைந்துள்ளது. 2018ல் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 186 புகார்கள் பெறப்பட்டன. இது 2023 செப்டம்பர் நிலவரப்படி மாதத்திற்கு 49க்கும் குறைவாக உள்ளது.
இந்தத் திட்டத்தில் உதவிய விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ) உள்ளிட்ட விலங்கு நலக் குழுக்களுக்கும் திரு லீ தமது பதிவில் நன்றி தெரிவித்தார்.
தெருநாய்களைக் கருத்தடை செய்வதிலும் அவற்றுக்கு புதிய வீடுகளைப் பெற்றுத் தருவதிலும் லங்கு, கால்நடை சேவை பங்காளிகளுடன் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றும் என்றார் திரு லீ.
டிஎன்ஆர்எம் திட்டத்தை நீட்டிக்க விலங்கு நலக் குழுக்கள் உடன்பட்டுள்ளன.
இந்த திட்டம் தெருநாய்களில் 80 விழுக்காட்டுக்கு கருத்தடை செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முயற்சி தொடரப்படாவிட்டால், இதுவரை செய்ததற்கு பலனில்லாது போய்விடும் என்று எஸ்பிசிஏ-யின் நிர்வாக இயக்குனர் ஆர்த்தி சங்கர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
டிஎன்ஆர்எம் திட்டத்தை சாலைகளில் சுற்றித் திரியும் பூனைகளுக்கும் விரிவுபடுத்து பற்றி ஆராய்வதாக ஏவிஎஸ் கூறியது. திட்டம் தயாரானதும் மேல் விவரங்கள் வெளியிடப்படும் என்று அது குறிப்பிட்டது.