சிங்கப்பூர் அதன் மின்சார உற்பத்திக்கு இன்னமும் இயற்கை எரிவாயுவை நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளது. 2035ஆம் ஆண்டில் மின்சாரத் தேவையில் பாதி அளவுக்கு மேல் உற்பத்தி செய்ய இயற்கை எரிவாயு தேவைப்படுகிறது.
இந்த நிலையில் சீரான, நம்பகமான, போட்டித் திறன்மிக்க விலையில் எரிவாயு விநியோகம் இருப்பதை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி சந்தை ஆணையம் திங்கட்கிழமை தெரிவித்தது.
“சிங்கப்பூரின் எரிசக்தி பாதுகாப்பில் பத்து ஆண்டுகளுக்கு மேல் இயற்கை எரிவாயு முக்கிய பங்கு வகிக்கும்,” என்று ஆணையம் குறிப்பிட்டது.
2035ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மற்றும் மின்சார இறக்குமதி இருந்தாலும் இயற்கை எரிவாயுவின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது. குறைந்த கரிமக் கழிவு கொண்ட எரிபொருள் வளங்களை அதிகரிக்க மேலும் அவகாசம் தேவைப்படுகிறது என்று ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார நிகழ்ச்சியில் திங்கட்கிழமை பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், மின்சாரத் துறைக்காக எரிவாயு கொள்முதல் மற்றும் விநியோகத்தை அரசாங்கம் ஒருகிணைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
இதற்காக மத்திய நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.
நாட்டின் எரிவாயு கொள்முதல் உத்தியில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றம் குறித்துப் பேசிய அமைச்சர் கான், நிலையான, தடையில்லா மின்சார உற்பத்திக்கு இது மிக அவசியம் என்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
இதனால் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் மின் உற்பத்தி நிறுவனங்களும் பயன் அடையும்.
இந்த உறுதியான அடித்தளத்தளத்துடன் சிங்கப்பூர் தூய்மையான எரிபொருளை நோக்கி பயணிக்க முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தூய்மையான புதைபொருளிலிருந்து கிடைக்கும் எரிவாயுவில் குறைந்த அளவு கரிமக் கழிவே வெளிப்படுகிறது.