மூப்படையும் வாழ்க்கைநிலையை ஆரோக்கியத்துடனும் துடிப்புடனும் எதிர்கொள்ள சரியான திட்டமிடல் அவசியம். அத்துடன் மூப்படைதலை ஆக்ககரமான கண்ணோட்டத்துடன் அணுகுவதற்கு தயார்ப்படுத்திக்கொள்ளவே ‘இளம் முதியவர்கள்’ எனும் சாராருக்கு ஆதரவளிக்கும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்றும் தொடர்பு, தகவல், சுகாதார அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.
மக்கள் கழக நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் தேசிய தினப் பேரணி உரைக்குப் பிந்திய கலந்துரையாடலில் அமைச்சர் ஜனில் பேசினார். அதில் இச்சாராரின் தற்போதைய செயல்பாடுகளே அவர்களின் மூப்படையும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்றும் அச்செயல்பாடுகள் அவர்களின் உடல்நலம், வேலை, குடும்பம், சமூக வட்டம் போன்ற பல்வேறு வாழ்வியல் அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருத்தல் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
அடித்தளத் தலைவர்கள், நற்பணிப் பேரவை தொண்டூழியர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் என ஏறத்தாழ 200 பேர் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பங்குகொண்டனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இக்கலந்துரையாடலில் இவ்வாண்டு மூப்படையும் சமூகத்தினரின் நலனைப் பேணுதல், இன நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், வேலை-வாழ்க்கையில் சமநிலை காணும் முயற்சிகள், பணியிட திறன் மேம்பாடு, வீடமைப்புத் திட்டங்களின் அம்சங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் கலந்துரையாடப்பட்டன.
அண்மையில் அமைச்சர்கள் தொடர்பில் ஊழல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தலைதூக்கினாலும் அவற்றைக் கையாளும் நடவடிக்கைகள் நேர்மையான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறப்பட்டது.
மேலும் ஒரு வலுவான, நிலையான அரசாங்க கட்டமைப்பு என்பது தவறுகளுக்கான தக்க தீர்வுகளைக் கண்டறிந்து மீண்டும் அத்தவறுகள் நடக்காமல் தடுக்க முனைவதே என்று தெரிவிக்கப்பட்டது. தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள் திறன்மிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்றும் பிரதமர் லீ தெரிவித்ததுபோல, நடுநிலையான நிலைப்பாட்டைக் கருத்தில்கொண்டு அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
வீடமைப்புத் திட்டங்கள் சம்பந்தமான அறிவிப்பின் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி நியாயமான முறையிலும் கட்டுப்படியாகும் விலையிலும் வீடுகள் கிடைக்கப்பெறும் கட்டமைப்பே நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இனிவரும் காலத்தில் அடிப்படை, பிளஸ், முதன்மைப் பிரிவுகளின் கீழ் மானியத்துடன் கூடிய வீவக வீடுகள், மறுவிற்பனை வீடுகள் என அனைத்து வீடுகளையும் கட்டுப்படியாகும் விலைக்குள் வைத்திருப்பதற்கான தொலைநோக்குப் பார்வையுடனான முயற்சி இது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மக்கள் கழகத் தலைமையகத்தில் இரவு 7 மணியளவில் உணவு விருந்துடன் தொடங்கி தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பங்குகொண்டோர் இந்திய சமூக மாணவர்களின் வளர்ச்சியில் சிண்டா போன்ற சுய உதவி அமைப்புகளின் பங்கு அளப்பரியது என்றும் பாராட்டினர்.
இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ, இந்திய சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி தனியாகப் பேசாதது ஏமாற்றமளித்ததாக பலர் தெரிவித்த நிலையில், இந்திய சமூகத்தை பாதிக்கும் பெருவாரியான பிரச்சினைகள் என்பது தேசத்தின் பிரச்சினைகளே என்றும் தேசத்தின் இடர்பாடுகள் களையப்படும்போது அதில் இந்திய சமூகமும் அடங்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஒவ்வொருவரும் தனக்கும் தன் இனத்திற்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி ஒன்றிணைந்த சமூகமாக நேர்மறை சிந்தனைகளை வளர்த்து ஆக்கபூர்வமாக செயல்பட முனைய வேண்டும் என்றும் இக்கலந்துரையாடலில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்திய சமூகத்தில் மூப்படைந்து வரும் பலரும் தொடர்ந்து பணியில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு, பணியில் இருப்பது வாழ்வின் நோக்கத்திற்கு அடித்தளமிடுவதோடு அன்றாடம் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படவும் வழிவகுக்கும் என்பதால் கிடைக்கப்பெறும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை பயன்படுத்தி இக்காலத் தேவைகளுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள மூத்தோர் முன்வர வேண்டும் என்றும் கூறப்பட்டது.
அதேபோல் பெருவாரியான இந்திய சமூகத்தினர் மனநலம் குறித்த பிரச்சினைகளுக்கு போதிய அக்கறை செலுத்த தவறுகின்றனர் என்ற கருத்திற்கு ஆரோக்கியமான வாழ்விற்கு உடல்நலனைப் போலவே மனநலனும் அவசியம் என்பதை உணர வேண்டும் என்று பார்வையாளர்களுக்குள் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பான ஆய்வுகளுக்கும் கருத்துக் கணிப்புகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர முன்வர வேண்டும் என்றும் அதன்மூலமே மனநலம் தொடர்பான இந்திய சமூகத்தினரின் தேவைகள் அறிந்துகொள்ளப்பட்டு தக்க முயற்சிகளை எடுக்க வழி ஏற்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.