ஜூரோங் வட்டார ரயில் பாதையிலும் குறுக்குத் தீவு ரயில் பாதையிலும் உள்ள ரயில் நிலையங்களின் வடிவமைப்புகள் மறுஆய்வு செய்யப்படுகின்றன.
அதன் மூலம் அந்தக் கட்டடங்களில் உள்ள கரிம அளவைக் குறைத்து, சிறிய அளவிலான பொருள்களைப் பயன்படுத்துவதே நோக்கம்.
2027ஆம் ஆண்டு முதல் கட்டங்கட்டமாகத் திறக்கப்படவிருக்கும் ஜூரோங் வட்டார ரயில் பாதைக்கு கட்டடக்கலை சார்ந்த பொருள்களின் அளவை 10 விழுக்காடுவரை குறைப்பதே இலக்கு என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
அதோடு, இரண்டாம், மூன்றாம் கட்டங்களில் குறுக்குத் தீவு ரயில் பாதையின் நிலையங்களில் உள்ள உட்கூரைத் தகடுகளின் எண்ணிக்கையை 25 விழுக்காடு குறைக்கவும் மாற்றுப் பசுமைப் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையங்கள் 2030களில் செயல்படத் தொடங்கும்.
டிசம்பர் 7ஆம் தேதி ஆணையம் வெளியிட்ட அதன் முதல் நீடித்த நிலைத்தன்மை அறிக்கையில் இடம்பெற்ற திட்டங்களில், வடிவமைப்புக்கான மறுஆய்வும் அடங்கியது.
ஆண்டுதோறும் வெளியிடப்படும் அந்த அறிக்கை, நிலப் போக்குவரத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூரின் கரிம அளவைக் குறைப்பதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளது.
குறுக்குத் தீவு ரயில் பாதையின் இரண்டாம் கட்ட திட்டங்களுக்கும் நடைபாதைப் புதுப்பிப்புக் குத்தகைகளுக்கும் குத்தகையாளர்கள் குறைந்த கரிம கான்கிரீட்டைப் பயன்படுத்தவேண்டும் என்று ஆணையம் கூறியது.
வழக்கமாகப் பயன்படுத்தப்படும் கான்கிரீட்டைக் காட்டிலும், கரிம வெளியேற்றத்தைக் குறைந்தது 20 விழுக்காடு குறைப்பதே நோக்கம் என்று ஆணையம் தெரிவித்தது.