‘சிம்ப்ளிகோ’ கணக்கு அடிப்படையிலான முறையை, எதிர்காலத்தில் மோட்டார் வாகனம் தொடர்பான கட்டணங்களைச் செலுத்தப் பயன்படுத்துவதற்குத் திட்டம் உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியிருக்கிறார்.
தற்போது அதனை பொதுப் போக்குவரத்துக்கும் சில்லறை விற்பனைக்கும் பயன்படுத்தலாம்.
“காலப்போக்கில் சில்லறை விற்பனை, பொதுப் போக்குவரத்து, மோட்டார் வாகனம் தொடர்பான கட்டணங்கள் ஆகியவற்றுக்கு ‘சிம்ப்ளிகோ’ அட்டைகளைப் பயன்படுத்தும் நோக்கில் செயல்படுகிறோம்,” என்று திரு சீ நாடாளுமன்றத்தில் கூறினார்.
இவ்வாறு, பணம் நிரப்பப்பட்ட ‘சிம்ப்ளிகோ’ அட்டைகளை, பழைய ஈஸி-லிங்க் அட்டைகள் போலவே பயன்படுத்தலாம். ஆனால், அத்தகைய தீர்வுகளைக் கண்டறிய நேரம் எடுக்கும் என்றார் திரு சீ. அதன் தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் நீடித்தன.
இதனால்தான் பெரியோர் போக்குவரத்து அட்டைகளுக்கான அட்டை அடிப்படையிலான முறை, $40 மில்லியன் திட்டத்தின்கீழ் குறைந்தது ஆறு ஆண்டுகள், அதாவது 2030ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டது என்றார் அமைச்சர்.
இதற்கிடையே, ரயில் நிலையங்களிலும் பேருந்துச் சந்திப்பு நிலையங்களிலும் கூடுதல் அட்டை வாசிப்பான்களைப் பொருத்துமாறு நிலப் போக்குவரத்து ஆணையத்தைக் கேட்டுக்கோண்டதாக திரு சீ தெரிவித்தார்.
அப்போதுதான் ‘சிம்ப்ளிகோ’ கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்தாத ‘சிம்ப்ளிகோ’ பயனர்கள், தங்கள் அட்டைகளில் உள்ள எஞ்சிய தொகையைத் தெரிந்துகொள்ளமுடியும்.
இந்த நடவடிக்கை குறித்து கேட்டபோது, போக்குவரத்து அமைச்சு மேல்விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் அனைத்து பெரியோரும் ஜூன் மாதத்திற்குள் ‘சிம்ப்ளிகோ’ முறைக்கு மாறவேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஜனவரி 9ஆம் தேதி அறிவித்திருந்தது. இருப்பினும், கிட்டத்தட்ட இரண்டு வாரங்களில் அதன் முடிவை அது மாற்றியது.
இந்நிலையில், சலுகை அட்டைகளுக்கான அட்டை அடிப்படையிலான முறை குறைந்தது 2030ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்படும் என்றும் திரு சீ கூறினார்.
முன்னதாக மூத்தோரிடமிருந்து கருத்துகள் திரட்டப்பட்ட பிறகு, அந்த முறையைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர். இருப்பினும், அது எப்போதுவரை பயன்பாட்டில் இருக்கும் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.
பயணிகளைப் பாதிக்காமல், இரண்டு அட்டை அடிப்படையிலான முறைகளை ஒருங்கிணைக்கும் வழிகளை ஆணையம் ஆராயும் என்றும் திரு சீ கூறினார்.