கார் விநியோகிப்பு நிறுவனம் ஒன்று வெடிகுண்டால் தகர்க்கப்படும் என்ற பொய்ச் செய்தியை ‘சிங்கப்பூர் மோட்டோர்ஷோ’ இன்ஸ்டகிராம் பக்கத்திற்கு அனுப்பியதாக ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்தச் சம்பவத்தின் தொடர்பில் தவறான தகவலைக் கொடுத்ததாக ஜனவரி 15ஆம் தேதி 23 வயது செங் யுவான் காங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஜனவரி 13ஆம் தேதி மதியம் சண்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் இருந்தபோது, “யூரோகார்ஸ் விரைவில் வெடிகுண்டால் தகர்க்கப்படும்,” என்ற செய்தியை அவர் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
மருத்துவப் பரிசோதனைக்காக செங்கை மனநலக் கழகத்தில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரது வழக்கு ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘சிங்கப்பூர் மோட்டோர்ஷோ 2024’ ஜனவரி 11இலிருந்து ஜனவரி 14வரை சண்டெக் சிங்கப்பூரில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் ‘யூரோகார்ஸ்’ கலந்துகொண்டதாக இணையத்திலிருந்து தெரியவந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், செங்கிற்கு ஏழாண்டுவரை சிறைத்தண்டனையும் $50,000வரை அபராதமும் விதிக்கப்படலாம்.