சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 1,890க்கும் அதிகமான தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் பதிவாகின.
சிங்கப்பூரின் முதல் 10 மோசடிகளில் முதல் முறையாக தீங்குநிரல் மோசடி இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு தீங்குநிரல் மோசடிகளில் ஏமாந்தவர்கள் இழந்த தொகை குறைந்தது $34.1 மில்லியன் இருக்கும் எனக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி18ஆம் தேதி) வெளியிட்ட மோசடி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தீங்குநிரல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களில் 43 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் 30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் என்று காவல்துறை கூறியது. மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களைப் ‘ஃபேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ ஆகிய இரு சமூக ஊடக தளங்களின் மூலம் தொடர்புகொண்டதாக அது மேலும் தெரிவித்தது.
“2023ஆம் ஆண்டில் தீங்குநிரல் மோசடிகள் அதிகரித்துவரும் கவலைக்குரிய முக்கிய மோசடிகளில் ஒன்றாக இருந்ததில் ஆச்சரியமில்லை. செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சியே இதற்கு முக்கியக் காரணம்,” என இணையப் பாதுகாப்பு நிபுணர் ராஜு செல்லம் கூறினார்.
தீங்குநிரல், பணயத் தீநிரல் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் மென்பொருள்களை உருவாக்க மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரு செல்லம் குறிப்பிட்டார்.
மோசடிக்காரர்கள் உண்மையான ‘கியூஆர்’ குறியீட்டின்மீது போலியான ‘கியூஆர்’ குறியீட்டை இடுவர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் அந்தக் ‘கியூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது அவர்களின் கைப்பேசிகள் தீங்குநிரல்களால் பாதிக்கப்படும் என்றும் திரு செல்லம் எடுத்துரைத்தார்.
தீங்குநிரல் மோசடிகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
“உதாரணமாக, ‘குறைந்த நேரச் சலுகை’ என மோசடிக்காரர்கள் வெளியிடும் கவர்ச்சிகரமான இணைய விளம்பரங்களை நம்பி பொருள்களை வாங்க அவசர அவசரமாக தீங்குநிரல் கொண்ட செயலியைப் பதிவிறக்கம் செய்து மோசடிகளில் சிக்குகின்றனர்.
“பதிவிறக்கப்பட்ட செயலி மூலம் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கு விவரங்களைச் சேகரித்து, அதன்மூலம் அவர்களின் வங்கி செயலியை அணுகி அங்கீகரிக்கப்படாதப் பரிவர்த்தனைகளை மோசடிக்காரர்கள் செய்கிறார்கள் எனத் திரு செல்லம் கூறினார்.