தீங்குநிரல் மோசடிச் சம்பவங்களில் இவ்வாண்டின் முதல் பாதியில் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட $8 மில்லியன் இழந்துள்ளனர்.
இதன் தொடர்பில் விசாரணை தொடரும் நிலையில், குறைந்தது எட்டு சம்பவங்களில் மத்திய சேம நிதி சேமிப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் $124,000ஐ இழந்துள்ளதாக மத்திய சேம நிதிக் கழகம், காவல்துறை, கவ்டெக் எனப்படும் அரசாங்க தொழில்நுட்ப அமைப்பு ஆகியவை நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சேம நிதிக் கழகமும் கவ்டெக்கும் சிங்பாஸ் முக அடையாள முறையை அமல்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் பாதுகாப்பு முறை சந்தேகத்திற்கு இடமான அல்லது அதிக இடர்பாடுள்ள கணினி நுழைவு முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, அண்மைக்கால மோசடிக்காரர்களின் செயல்களை முறியடிக்கும் விதமாக 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த முறைப்படி கணினிச் சேவைகளை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
“இதில் கழக உறுப்பினர்கள் கணினிச் சேவைகளைப் பயன்படுத்துவதில் சற்று அசெளகரியத்தை எதிர்நோக்குவர் என்றாலும் இது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற வகையில் இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்,” என்று அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த முக அடையாள முறை தொடர்பில், கழக உறுப்பினர்கள், 6335-3533 என்ற எண்ணில் சிங்பாஸ் உதவி மையத்தை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை தொடர்புகொள்ளலாம் அல்லது www.go.gov.sg/singpass-faq என்ற இணையத்தளம் வழியாகவோ விளக்கம் பெறலாம்.
மேலும், சிங்கப்பூர் முழுவதும் ஆங்காங்கே உள்ள கழக அலுவலகங்களுக்கும் சென்று விளக்கம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நீங்குநிரல் மோசடியில், பாதிக்கப்படும் ஒருவர் சமூக ஊடகத்தில் மலிவான விலையில் பொருள் விற்கப்படுவது தொடர்பான விளம்பரத்தைப் பார்க்கிறார். இதில் அவருடைய ஆன்டிராய்ட் கைப்பேசியில் ஒரு பதிவைப் பெற்று அதன்மூலம் மூன்றாம் தரப்பு கடை ஒன்றிலிருந்து பொருளை வாங்குவதற்கான விண்ணப்பத்தைப் பெறுகிறார். அந்தப் பதிவை அவர் கீழிறக்கும்போது அவருடைய ஆன்டிராய்ட் கைப்பேசியில் தீங்குநிரல் புகுத்தப்படுகிறது.
இதன் பின்னர், மோசடிக்காரர் பாதிக்கப்பட்டவரை தொடர்புகொண்டு அவருடைய கைப்பேசி சேவையை முடுக்கிவிடும்படி கூறுவார். இது கைப்பேசியின் பாதுகாப்பு கட்டமைப்பை பலவீனப்படுத்தி மோசடிக்காரர் அந்தக் கைப்பேசியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள உதவுகிறது.
இதன்மூலம் கைப்பேசி உரிமையாளரின் வங்கிக் கணக்கு விவரங்களை மோசடிக்காரர் பெற முடியும்.
பின்னர், அந்த மோசடிக்காரர், பாதிக்கப்பட்டவரின் வங்கிச் செயலிகளுக்குள் ஊடுருவி, பாதிக்கப்பட்டவர் வங்கி சேமிப்பிலிருந்து எடுக்கக்கூடிய ரொக்க வரம்பை உயர்த்தி, பணத்தை பெற்றுவிடுவார். இதில் மோசடிக்காரர், தனது செயல்களை மறைக்க இது தொடர்பான குறுந்தகவலையும் பணப் பரிவர்த்தனை தொடர்பான மின்னஞ்சல் தகவல்களையும் அழித்துவிடுவார்.
மோசடிக்காரர், மத்திய சேம நிதி சேமிப்பிலிருந்து சிங்பாஸ் பயன்படுத்தி பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
அத்துடன், சேம நிதிக் கழக உறுப்பினரின் வங்கி விவரங்களைப் பெற்று உறுப்பினருக்கு சேமிப்பிலிருந்து வழங்கப்படும் பணத்தை மோசடிக்காரர் பெற்றுக்கொள்ளலாம்.
இதன் தொடர்பில், ஜூன் மாதம் ஆன்டிராய்ட் கைப்பேசி பயன்படுத்தும் இருவரிடமிருந்து குறைந்தது $99,880 மோசடிக்காரர்கள் ஏமாற்றிப் பெற்றுக்கொண்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது.