ஆகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளின் பிடிஓ விற்பனை நடவடிக்கை செப்டம்பர் மாத இறுதிக்குத் தள்ளிவைக்கப்படுவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
மே மாதம் தொடங்கிய பிடிஓ விற்பனை நடவடிக்கையின் ஒதுக்கீட்டு முடிவுகள் ஜூலையிலிருந்து ஆகஸ்ட் முதல் வாரத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டதால் ஆகஸ்ட் மாத விற்பனை நடவடிக்கை செப்டம்பர் மாத இறுதிக்குத் தள்ளிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் கடந்த விற்பனையில் எஞ்சிய வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் ஒதுக்கீட்டு வரிசை எண்ணை ஆகஸ்ட் கடைசி வாரத்தில்தான் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புதிய கால நீட்டிப்பால் விண்ணப்பதாரர்கள் தங்களின் வரிசைநிலையை அறிந்துகொள்ள முடியும். மேலும், அடுத்த விற்பனை நடவடிக்கைத் தொடக்கத்தின்போது அவர்கள் வீடு கேட்டு விண்ணப்பிக்கலாமா என்பதைத் தீர்மானிக்கவும் முடியும் என வீவக கூறியது.
இது முதல்முறை விண்ணப்பிப்பவர்களுக்கு (பெற்றோர்களும் திருமணமான இணையர்களும்) முன்னுரிமை அளிக்கவும் அடுத்த விற்பனைத் திட்டத்திற்குத் தேவையான மாற்றங்களைச் செய்யவும் கழகத்திற்குக் கூடுதல் கால அவகாசம் வழங்கும் எனவும் வீவக குறிப்பிட்டது.
வீடு வாங்க விரும்புவோர் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
மே மாத விற்பனையின் தொடக்கத்தில் ஏற்பட்ட இணையக் கோளாறே ஒதுக்கீட்டு முடிவுகள் தாமதமானதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. அப்போது வீவக இணையத்தளத்தில் நுழைய இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருந்ததாக சில விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
வரவிருக்கும் பிடிஓ விற்பனைத் திட்டத்தில், சுவா சூ காங், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், தெங்கா போன்ற பேட்டைகளில் கிட்டத்தட்ட 6,700 வீடுகள் இடம்பெறும் என வீவக தெரிவித்தது.
இவ்வாண்டின் இறுதி ‘பிடிஓ’ வீட்டு விற்பனை நடவடிக்கை டிசம்பர் மாதம் இடம்பெறும்.
அந்த நடவடிக்கையின்போது பிடோக், பீஷான், புக்கிட் மேரா, புக்கிட் பாஞ்சாங், ஜூரோங் வெஸ்ட், குவீன்ஸ்டவுன், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் ஏறக்குறைய 6,300 வீடுகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 முதல் 2025 வரை மொத்தம் 100,000 வீடுகளை விற்பனைக்கு விடுவது என்ற தனது இலக்கில் தொடர்ந்து நீடிப்பதாக வீவக குறிப்பிட்டது.