எட்டு வயது முதல் பன்னிரண்டு வயது வரை, சிறுமி ஒருவர் நான்கு ஆண்டுகளாக தனது நான்கு மூத்த சகோதரர்களால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார்.
அந்தச் சகோதரர்களில் ஒருவர் பிப்ரவரி 5ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் பாலியல் ரீதியான தாக்குதலின் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு இப்போது 20 வயதாகிறது.
2020ஆம் ஆண்டில் சிறுமியை பாலியல் ரீதியாகத் தாக்கியபோது, அந்த நான்கு பேரில் மூன்றாவது சகோதரர் 16 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டிருந்தார். அப்போது அந்தச் சிறுமி 10 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்டிருந்தார்.
தண்டனை விதிக்கப்படும்போது மற்ற ஏழு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. 18 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட எஞ்சிய மூன்று சகோதரர்கள் வரும் மாதங்களில் தங்களின் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 14 வயதாகும் அந்தச் சிறுமி குடும்பத்திடமிருந்து பிரிந்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை அந்தச் சம்பவங்கள் நடந்தன.
அந்தச் சிறுமி முதலில் அவற்றைப் பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இறுதியில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதியன்று, பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து தமது பள்ளியில் உள்ள அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர், மூன்றாவது நபருக்கு எட்டு முதல் ஒன்பது ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வழக்கு விசாரணை பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.