தனது பராமரிப்பில் இருந்த நோயாளிகளின் வங்கி அட்டைகளைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் தாதிமீது மோசடி உட்பட 22 குற்றச்சாட்டுகள் திங்கட்கிழமை சுமத்தப்பட்டன.
குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் அந்த 23 வயது சிங்கப்பூரரின் பெயர் முகமது இலியாஸ் முகமது நூர்.
அவர், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தாதியாக பணிபுரிந்த போது இக்குற்றங்களைப் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
உட்லண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்தவரான முகமது இலியாஸ் தன் பராமரிப்பில் இருந்த நோயாளிகளின் வங்கி அட்டை விவரங்களைத் திருடி அதைப் பயன்படுத்திப் பல அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைச் செய்ததாக கூறப்பட்டது.
அந்த மருத்துவமனையின் முன்னாள் நோயாளி ஒருவர் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அளித்த புகாரின்பேரில் முகமது இலியாஸ் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக $12,000த்திற்கு மேல் இழந்திருப்பதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முகமது இலியாஸ் வரும் மார்ச் 4ஆம் தேதி ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.