சேவை ஒப்பந்த மீறல், அலட்சியம் காரணமாகப் பராமரிப்புக் கடப்பாட்டு விதிமீறல் ஆகியவை தொடர்பில் கார்ட்லைஃப் நிறுவனத்திற்கு அதன் வாடிக்கையாளர் ஒருவரின் சார்பாக அவருடைய வழக்கறிஞர் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.
தன் கோரிக்கைகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கோரிக்கை விடுத்தவர் தொடங்கலாம் என்பதைக் குறிப்பதே கோரிக்கைக் கடிதம்.
தன்னிடம் சேவை நாடிய வாடிக்கையாளர் $60,000க்கும் $250,000க்கும் இடைப்பட்ட தொகையைக் கோருவதாக கார்ட்லைஃப் தெரிவித்தது.
சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் இயங்கிவரும் தனியார் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியானது ‘கார்ட்லைஃப்’.
நிறுவனத்தின் 22 சேமிப்புக் கலன்களில் ஏழு தொப்புள்கொடி ரத்த அலகுகள் உகந்த வெப்பநிலையில் பராமரிக்கப்படாததால் பாழானதை அடுத்து கார்ட்லைஃப் நிறுவனத்தின் செயல்முறைகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கோரிக்கைக் கடிதம் தொடர்பில் நிறுவனம் சட்ட ஆலோசனை நாடியதை அடுத்து, கோரிக்கை விடுத்தவர் முன்வைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றது.
இதற்குமுன் வேறு வாடிக்கையாளரிடமிருந்து சிறு கோரிக்கைகள் நீதிமன்றத்தின் மூலம் பிப்ரவரி மாதம் ஒரு கோரிக்கைக் கடிதம் வந்ததாகக் கார்ட்லைஃப் தெரிவித்தது. $20,000க்கு உட்பட்ட இழப்பீட்டுக்கான கோரிக்கைகளைக் கையாளும் அதிகார வரம்பு, சிறு கோரிக்கைகள் நீதிமன்றத்துக்கு உண்டு.