தெம்பனிஸ் நார்த்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில், சீனப் புத்தாண்டுக்காக ஒரு தம்பதியர் போட்ட கடல்நாகச் சித்திரம் சில நாள்களுக்குப் பிறகு அகற்றப்பட்டது.
பிப்ரவரி 3ஆம் தேதி நள்ளிரவு மணிவாக்கில், தேவைக்கேற்பக் கட்டப்படும் வீட்டுத் திட்டத்தின் கீழ் தெம்பனிஸ் கிரீன்வாய்ன்சில் வசிக்கும் அந்தத் தம்பதியினர், தெம்பனிஸ் ஸ்திரீட் 62, புளோக் 640Bன் மின்தூக்கிப் பகுதியில் உள்ள சுவரில் அந்தக் கடல்நாகச் சித்திரத்தை வைத்தனர்.
அக்கம்பக்கத்தில் உணர்வுகளை உற்சாகப்படுத்த தாமும் தமது மனைவியும் எண்ணியதாகக் கணவர் கூறினார். பிரபலமான தோ பாயோ கடல்நாக விளையாட்டு மைதானத்தையொட்டி, வெள்ளை நிற ஒட்டுத்தாள்களைப் பயன்படுத்தி அதனை வடிவமைத்ததாகவும் அவர் சொன்னார்.
தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங் அது பற்றி குடியிருப்பாளர் ஒருவரிடமிருந்து தெரிந்துகொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். அந்தக் குடியிருப்பாளர் அச்சித்திரம் அழகாக இருந்தது என்று சொன்னதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இது பொதுச் சொத்தில் அனுமதிக்கப்படாது என்று தமக்கு தெரிந்ததாக நகரமன்றத் துணைத் தலைவருமான திரு பே கூறினார். ஆனால் எந்தச் சேதமும் இல்லாததால் சீனப் புத்தாண்டு இறுதி வரை அதனை வைத்திருக்குமாறு அவர் நகரமன்றத்திடம் தெரிவித்தார்.
இருந்தாலும், திரு பேயின் யோசனை தகுந்த நேரத்தில் துப்புரவாளரைச் சென்றடையாததால், இரண்டு நாள்களுக்குப் பிறகு சித்திரம் அகற்றப்பட்டது.
அந்த அலங்காரம் அதிகாரபூர்வ ஒப்புதலின்றி போடப்பட்டதாக நகரமன்றம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது. துப்புரவு, பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்றிய துப்புரவாளர் ஒருவர் அதனை அகற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தம்பதியர் மீண்டும் அந்தச் சித்திரத்தைப் போட விரும்பினால், சீனப் புத்தாண்டு இறுதிவரை அதனை வைத்திருக்க அனுமதி வழங்கப்படும் என்று நகரமன்றம் கூறியது.